ராம.நாராயணனிடம் உதவியாளராகப் பணியாற்றிய அன்புசரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் "வீரசோழன்'. இதில் அஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். "வள்ளுவன் வாசுகி' படத்தில் நடித்த ஸ்வேதா கதாநாயகியாக நடிக்கிறார். ரமேஷ், பிச்சுமணி, தீனா, சிவமாறன் ஆகிய புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
வீர சோழன் படத்தின் கதை குறித்து அதன் இயக்குனர் அன்புசரவணன் கூறுகையில், "பழமை மாறாத ஒரு கிராமத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவன் மட்டும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்புக்காக சென்னை செல்கிறான். படிப்பு முடிந்து கிராமத்துக்குத் திரும்பும்போது ஒரு பிரச்னையில் நண்பர்கள் உள்பட ஊரே இரண்டுபட்டு கிடப்பதைக் காண்கிறான். தன்னுடைய நடவடிக்கைகளால் கிராமத்தினரை எப்படி ஒன்று சேர்க்கிறான் என்பதை மண்ணின் மணத்தோடு யதார்த்தமாகச் சொல்கிறோம். இது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரசோழன் என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம் என்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம். மனிதநேயப் பண்புடன் வாழ்ந்தால் கிராமம் மட்டுமல்ல உலகமே ஒற்றுமையுடன் வாழும் என்பதுதான் படத்தின் கரு'' என்றார்.
இசை -விஜய்சர்மா. பாடல்கள் -பிறைசூடன், பழனிபாரதி, யுகபாரதி. தயாரிப்பு -டி.ஜேம்ஸ், கே.தமிழ்ச்செல்வன்.