
நித்யா மேனன் பட இயக்குனர் மீது போலீசில் பெண் கதாசிரியர் பாலியல் புகார்
மலையாளத்தில் கவனிக்கத்தக்க படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் வி.கே பிரகாஷ். நடிகர் பஹத் பாசிலை தான் இயக்கிய நத்தோலி ஒரு சிறிய மீன் அல்ல என்கிற படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தவர்.. நித்யா மேனன் நடிப்பில் பாப்பின்ஸ், பிரணா ஆகிய படங்களை இயக்கியவர். இந்த நிலையில் பெண் கதாசிரியர் ஒருவர் இவர் மீது காவல்துறையில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது.
“இயக்குனர் வி.கே பிரகாஷுக்கு என்னுடைய கதை குறித்து வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். அது பற்றி விவாதிக்க வேண்டும் என என்னை கொச்சிக்கு வரச்சொன்ன வி.கே பிரகாஷ் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகள் புக் செய்து இருந்தார். நள்ளிரவில் எனது அறைக்கு வந்த அவர் என்னுடைய கதை குறித்து கூறுமாறு கேட்டார். அப்போது எனக்கு சிறிதும் மதுவும் வழங்கினார். மேலும் நெருக்கமான காட்சி ஒன்றை நடித்துக் காட்டும்படி கூறியவர் என் தோள்களை இறுக்கமாக பிடித்து என் கன்னத்தில் முத்தமிடவும் முயன்றார். ஆனால் அவரது செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் எனது அறையை விட்டு வெளியேறினார்.
மறுநாள் நான் எனது ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன். பின்னர் தான் நடந்து கொண்டது தவறு என்றும் கூறி இதை வெளியில் சொல்ல வேண்டாம் என தனது உதவி இயக்குனர் மூலமாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இந்த விஷயத்தை மறைக்கும்படி கேட்டுக் கொண்டார். தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் ரீதியான சங்கடங்களை வெளிப்படுத்தி வருவதால் நானும் தைரியமாக இயக்குனர் வி.கே பிரகாஷ் மீது புகார் அளிக்க முன் வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!