
தெலுங்கு இளம் நடிகர் நந்தமூரி தாரக ரத்னா காலமானார்
தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் பேரன்களில் ஒருவரான இவர், நந்தமூரி தாரக் குடும்பத்திலிருந்து தனது சித்தப்பா பாலகிருஷ்ணா, சகோதரர்கள் ஜூனியர் என்டிஆர், கல்யாண்ராம் ஆகியோரை தொடர்ந்து நடிகராக சினிமாவில் நுழைந்தார்.
2002ல் ஒகடோ நம்பர் குர்ரடு என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கூட தொடர்ந்து நடித்து வந்தார். தாத்தாவின் வழியில் எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் ஆசையில் தனது தாத்தா துவங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சிப்பணிகளிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார் நந்தமூரி தாரக ரத்னா.
குறிப்பாக அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஆசையுடன் இவர் களப்பணி ஆற்றி வந்தார். அந்தவகையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் யுவகளம் பாதயாத்திரையில் கலந்து கொண்டபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடனடியாக குப்பம் தொகுதியில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சை அளிப்பதற்காக மறுநாளே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!