
மோகன்லால் மீது வருத்தத்தில் மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர்
கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியவுடன் கடந்த 2017லேயே கதாசிரியர் ஜிஜோ புன்னூஸிடம் இதுபற்றி சொல்ல அவரும் அப்போது படத்திற்கு திரைக்கதை எழுதும் வேலைகளில் இறங்கிவிட்டார். படப்பிடிப்பெல்லாம் முடிந்து விட்ட நிலையில் தற்போது மோகன்லால் மீது இருக்கும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜிஜோ புன்னூஸ்.
இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் எழுதியுள்ளதாவது ; “இந்த படத்தை உருவாக்க வேண்டுமென மோகன்லால் கூறியதுமே இதற்கான திரைக்கதையை எழுதி விட்டேன். படப்பிடிப்பு துவங்குவதற்குள் கிட்டத்தட்ட 22 முறை இதை மாற்றி மாற்றி எழுதி அழகிய வடிவம் கொடுத்தேன். இடையில் கொரோனா தாக்கம் காரணமாக இந்த படம் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மோகன்லாலின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத்தொடர்ந்து இந்த படத்தையும் அவரது முந்தைய படங்களான புலிமுருகன், லூசிபர், மரைக்கார் படங்கள் போன்று இன்னும் கொஞ்சம் கமர்சியலாக மாற்ற முடிவு செய்தார் மோகன்லால்.
அதற்கு காரணம் அவர் தனது ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்து தான்.. நான் வெறும் 7 படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளேன்.. அவரோ கிட்டத்தட்ட 350 படங்களில் நடித்துவிட்டார். அவருக்கான அனுபவம் பெரிதாக இருக்கலாம். ஆனால் அதன்பிறகு என்னை கண்டுகொள்ளாமல் இயக்குனர் டி.கே ராஜீவ்குமாருடன் இணைந்து திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து அதைத்தான் தற்போது படமாக்கி உள்ளார் மோகன்லால். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் அவர்தான் என்பதால் அவரது முடிவுப்படி தானே எல்லாம் நடக்க வேண்டும்.
அதன்பிறகு வந்த நாட்களில் அவர் இயக்குனர் டி.கே.ராஜீவ்குமாருடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்தார். எனக்கும் சென்னையில் இந்த படத்தின் பாடல் காட்சி குறித்தும் செட் அமைப்பது தொடர்பாகவும் சில வேலைகளை ஒப்படைத்திருந்தார். அதைமட்டும் செய்து வந்தேன். அந்த வகையில் இதில் முழுக்க முழுக்க நான் எழுதிய திரைக்கதை படமாக்கப்படவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்” என்று கூறியுள்ளார் ஜிஜோ புன்னூஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!