
கதைத் திருட்டு : சீமான், லிங்குசாமி இடையே நடந்த பஞ்சாயத்து
அரசியலில் தீவிரமாக இருக்கும் சீமான், ஒரு காலத்தில் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தார். அரசியலில் இறங்கிய பிறகு சினிமாவை மறந்துவிட்டார். அவர் "பகலவன்" என்ற படத்தை இயக்கப் போவதாக பல வருடங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அதில் விஜய் கூட நடிக்கலாம் என்றெல்லாம் தகவல் வெளியாகி இருந்தது.
அந்த "பகலவன்" படத்தின் கதையை லிங்குசாமி திருடி சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்கப் போவதாக 2013ம் ஆண்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் நடந்த பஞ்சாயத்தில் தற்செயலாக அந்தக் கதை ஒரே மாதிரியான கற்பனை ஒன்றுபடுதல் நிகழ்வு காரணமாக கதைச் சாயல் ஏற்பட்டுள்ளது என்று முடிவானது.
அதன்பின் சீமான் கதையின் சாயலில் லிங்குசாமி இயக்குவதாக சொல்லப்பட்ட படத்தின் கதையை இயக்காமல் வேறு கதையை இயக்கினார். அதுதான் "அஞ்சான்" படமாக வெளிவந்தது. அதே சமயம், தமிழ் தவிர வேறு மொழிகளில் இந்தக் கதையை லிங்குசாமி படமாக்கினால் அதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என சீமான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அத்துடன் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து இனிதே நிறைவு பெற்றிருக்கிறது.
ஆனால், அதே "பகலவன்" கதை குறித்து லிங்குசாமி மீது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் சீமான் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதைப் பற்றி விசாரித்த அந்த சங்கத்தின் தலைவர் பாக்யராஜ், ஏற்கெனவே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் எட்டு வருடங்களுக்கு முன்பு இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டது குறித்து நினைவுபடுத்தி தங்கள் சங்கத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என விவகாரத்தை முடித்துள்ளார்.
இப்போது ஏன் இந்த "பகலவன்" கதை குறித்து மீண்டும் சீமான் புகார் அளித்துள்ளார் என்பதற்கும் காரணம் இருக்கிறது. லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க இயக்க உள்ள கதை தன்னுடைய "பகலவன்" கதைதான் என சீமான் நினைக்கிறாராம். இந்தக் கதையைப் படித்து பார்த்துத்தான் நாயகன் ராம் பொத்தினேனி கூட இயக்குனர் லிங்குசாமியை மனமாரப் பாராட்டியிருந்தார்.
லிங்குசாமி, ராம் பொத்தினேனி படம் ஜுலை 12ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. சீமான் இத்துடன் நிறுத்திக் கொள்வாரா அல்லது நீதிமன்றத்தை அணுகுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!