
குஷி படத்திற்கு வேறொரு கிளைமாக்ஸ் சொன்ன எஸ்.ஜே.சூர்யா
எத்தனை முறை ஒளிபரப்பப்பட்டாலும் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்க்கும் ஒரு சுவாரசியமான காதல் படம் "குஷி". அந்தப் படத்தின் கிளைமாக்சில் தொலைபேசி (லேண்ட்லைன்) இருந்தும் தொடர்பு கொள்ள முடியாமல் விஜய், ஜோதிகா தவிப்பார்கள். ஊருக்குப் புறப்படும போது ரயில்வே ஸ்டேஷனில் கூட சந்தித்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பம் அமையும்.
செல்போன் அதிகம் பயன்பாட்டுக்கு வராத காலத்தில் வந்த படம் அது. நேற்று அப்படம் டிவியில் ஒளிபரப்பான போது ஒருவர் டுவிட்டரில், “செல் போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே குஷி படம் முடிஞ்சிருக்கும், ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது” என டுவீட் செய்திருந்தார்.
அதற்கு எஸ்ஜே சூர்யா, செல்போன் இருந்திருந்தால் கிளைமாக்ஸ் எப்படி இருந்திருக்கும் என டுவீட்டில் குறிப்பிட்டு பதிலளித்தார். அதில், “அப்படியெல்லாம் இல்ல, மனசு வலில ரெண்டு பேரும் போனை தொலைச்சிட்டதா காட்டுனா போச்சு. பிரண்ட்ஸுக்கு மாறி மாறி போன் பண்ணா, அவங்க, “சிவா ஸ்டேஷனை விட்டு போயிட்டான், ஜெனி ஸ்டேஷனை விட்டு போயிட்டா”னு சொல்வாங்க, அவ்ளோதான். எது கிளைமாக்சோ அதுக்கேத்தபடி சீனை பில்ட்அப் பண்ண வேண்டியதுதான்,” என்றார்.
எஸ்ஜே சூர்யாவின் இந்த பதில் விஜய் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. பலரும் ""குஷி 2" எடுங்க சார், மீண்டும் விஜய் கூட படம் பண்ணுங்க,” என அவருக்கு கமெண்ட் செய்தனர்.
அஜித்திற்கு "வாலி" என்ற திருப்புமுனை படத்தையும், விஜய்க்கு "குஷி" என்ற திருப்புமுனை படத்தையும் கொடுத்த இயக்குனர் எஸ்ஜே சூர்யா, இப்போது நடிகராக மிகவும் பிஸியாக இருக்கிறார். விஜய்யுடன் அவர் மீண்டும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற முடிவு விஜய்யின் கையில்தான் உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!