
மீண்டும் தொடங்கியது அண்ணாத்த படப்பிடிப்பு : தமிழ்நாட்டிலேயே படத்தை முடிக்க முடிவு
படப்பிடிப்பு தொடங்கிய சில நாளிலேயே படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தபோதும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார். அண்ணாத்த படத்தை முடித்து கொடுப்பது என் கடமை அதை செய்வேன் என்றார்.
இந்த நிலையில் கொரோனா 2வது அலை பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதால் அதற்கு முன்னதாக படத்தை முடித்து விட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்காக சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கு ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாளில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
கடுமையான கட்டுபாடுகள், மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே பணியாளர்கள் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். படத்தின் வெளிப்புற காட்சிகளையும் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கி தமிழ்நாட்டுக்குள்ளேயே படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!