
பெண் இயக்குனர்களை மதிக்கும் இளம் தலைமுறை: ஹலீதா ஷமீம்
ஹலீதா ஷமீமின் படங்களில் தொடர்ந்து சமுத்திரகனி நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சமுத்திரகனியிடம் நான் சினிமா கற்றவள். ஆனால் நான் எந்த கதை எழுதும்போதும் அவரை மனதில் வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. பூவசரம் பீ பீ படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கேரக்டரில் நடித்துக் கொடுத்தார். சில்லுக்கருப்பட்டியில் அவர் நடிக்கும்படியான ஒரு கேரக்டர் இருந்தது.
ஏலே படத்தின் கதை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியது. கதை எழுதியபோது தந்தை கேரக்டரில் நடிக்க நான் வேறு சில நடிகர்களைத்தான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அது படமாகும்போது அவர்தான் நடிக்கும்படி ஆனது. இது திட்டமிடப்படவில்லை, அதுவாக அமைந்தது.
நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் ஒரு பெண்ணாக சினிமாவில் இயங்குவது, அதுவும் இயக்குனராக இயங்குவது சற்று சிரமமாக இருந்தது. ஆண்களுடன் பணியாற்றுவதில் எனக்கு சிரமம் இருந்தது. ஒரு பெண்ணுடன் பணியாற்றுவதில் ஆண்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. பெண் இயக்குனர்களுக்கு உரிய மரியாதையை இளம் தலைமுறையினர் தருகிறார்கள். சினிமாவில் நல்லவர்கள் அதிகம். அவர்களை தேடிக் கண்டுபிடிப்பது தான் சிரமம். நான் அப்படி சில நல்லவர்களை கண்டுபிடித்திருக்கிறேன். எனது சினிமா பயணம் அவர்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!