
சசிகுமாரின் நந்தன் படத்துக்கு டில்லி தமிழ் சங்கத்தில் பாராட்டு
சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2024ல் வெளியான படம் "நந்தன்". தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிகழ்வை "நந்தன்" படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் கிளைமாக்ஸில் தமிழகத்தில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள்.
"நந்தன்" படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குனர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாகக் கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு. கடந்த தினத்தில் தமிழகத்தில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றினர்.
இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக "நந்தன்" படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் ரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டில்லி தமிழ்ச் சங்கம். இந்த பாராட்டு விழாவில் இந்திய கலாசார அமைச்சகத்தின் இயக்குநர் ஷா பாசல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், “படத்தில் நான் பட்ட சிரமங்கள் மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. "நந்தன்" படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார் சசிகுமார். “எப்போதுமே சினிமா தமிழ் மக்களின் ரத்தத்துடன் கலந்தது. அதனால்தான் முதலமைச்சரையே தமிழ் மக்கள் சினிமாவில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். "நந்தன்" படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் பொறுப்போடு செய்ய வைக்கும்” என்றும் பேசியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!