
பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை
இந்த பாடல் சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. 1955ம் ஆண்டு வெளிவந்த படம் "கணவனே கண்கண்ட தெய்வம்". டி.ஆர்.ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடித்திருந்தனர், பெங்காலி மற்றும் இந்திப் பட இசை அமைப்பாளர் ஹேமந்த் குமார் இசை அமைத்திருந்தார்.
150 படங்களுக்கு மேல் இசை அமைத்து 3 முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் ஒரு முறை சிறந்த பாடகருக்குமான தேசிய விருதையும் பெற்றவர். இவர் இசை அமைத்த ஒரே தமிழ் படம் "கணவனே கண்கண்ட தெய்வம்".
இந்த படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் பானுமதி. தான் நடிக்கும் படத்தின் பாடல்களை தானே பாடும் வழக்கம் கொண்டவர் பானுமதி. இதனால் இந்த படத்திற்காக "உன்னை கண்தேடுதே..". என்ற பாடலை பாடியிருந்தார்.
ஒரு கட்டத்தில் என்ன காரணத்தாலோ படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக அஞ்சலி தேவி நடித்தார். படத்தில் இருந்து விலகி விட்டதால் நான் பாடிய பாடலை அஞ்சலி தேவிக்கு பின்னணி பாடலாக மாற்றக்கூடாது என்று பிரச்னையை கிளப்பினார் பானுமதி, இதனால் அந்த பாடலை மீண்டும் பி.சுசீலா பாடினார்.
என்றாலும் பானுமதி விடவில்லை. பாட்டும், இசையும் இசை அமைப்பாளரின் உரிமை. ஆனால் பாட்டின் இடையே வரும் "விக்கல்" சத்தம் என்னுடைய சிந்தனையில் வந்தது. அதை பி.சுசீலா பயன்படுத்தியது தவறு என்று அடுத்த சர்ச்சையை கிளப்பினர். பின்னர் ஒரு வழியாக தயாரிப்பு தரப்பு பானுமதியை சமாதானப்படுத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!