
மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம்
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அவரை புகழ்ந்து பேசும்போது, "ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது ‛உயிரே, உறவே, தமிழே" என தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்" என பேசினார்.
தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாக கமல் பேசியதற்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, பா.ஜ.,வின் எடியூரப்பா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படம் தொடர்பாக கர்நாடகாவில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள், பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும் கமல் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் என கன்னட அமைப்பினர் எச்சரித்துள்ளனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் தக் லைப் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
அதேசமயம் கமலின் இந்த பேச்சை இங்குள்ள அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது. இது தான் வரலாற்று உண்மை என சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளர்.
மன்னிப்பு கேட்க முடியாது
இதனிடையே, தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்த தக் லைப் பட விழாவில் பேசிய கமலிடம் இந்த சர்ச்சை பற்றி கேள்வி எழுந்தது. அதற்கு அவர் கூறியதாவது : ‛‛என் கருத்தை எனது அருகில் இருந்து பார்த்தால் சரியாக தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாக தோன்றும். அன்பு மிகுதியால் நான் அப்படி பேசினேன். இந்த விஷயத்தில் அவர்கள் குழம்பி உள்ளனர். மொழி பற்றி வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். மொழிகள் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது"" என கமல் தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!