
பிளாஷ்பேக்: சந்திரலேகாவை தேடி அலைந்த எழுத்தாளர்கள்
1943ம் ஆண்டு "மங்கம்மா சபதத்தை"யும் 1944ம் ஆண்டு "பாலநாகம்மா" படத்தையும் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன். பெண்ணை மையப்படுத்திய இந்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு அந்தக் காலத்திலேயே லட்சக்கணக்கில் வசூல் செய்த படங்கள்.
இதனால் தனது அடுத்த படமும் பெண்ணை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்று நினைத்த வாசன், தனது கதை இலாகாவை அழைத்து ஆலோசனை நடத்தினார். பெரிய வீரமிக்க பெண்ணாக இருக்க வேண்டும், ஆணால் செய்ய முடியாத காரியங்களை செய்பவளாக இருக்க வேண்டும். வீரம், அன்பு, ஆணவம், வெறி இப்படி எல்லா குணங்களும் கொண்டவளாக கதை நாயகி இருக்க வேண்டும் அதற்கேற்ப கதையை தயார் செய்யுங்கள் என்று கூறிய அவர் எனது அடுத்து நாயகி "சந்திரலேகா", அவளின் கதையை எழுதி வாருங்கள் என்றார். "சந்திரலேகா" என்று விளம்பரமும் செய்தார்.
அதாவது கதை ரெடியாவதற்கு முன்பே படத்தின் தலைப்பை அறிவித்தார் வாசன். வாசனின் கதை இலாகாவில் இருந்த கொத்தமங்கலம் சுப்பு, கி.ரா. சங்கு சுப்பிரமணியம், வேப்பத்தூர் கிட்டு போன்ற ஜெமினி எழுத்தாளர்கள்தான் "மங்கம்மா சபதம்" மற்றும் "பாலநாகம்மா" கதையை எழுதியவர்கள். அவர்களே சந்திரலேகா கதையையும் தேடினார்கள். ஆனால் மாதங்கள் பல ஆகியும் அவர்களால் கதையை எழுத முடியவில்லை. இதனால் மனம் வெறுத்த வாசன், அடுத்து "அவ்வையார் "படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும், வேப்பத்தூர் கிட்டு ஒரு வாரம் அவகாசம் கேட்டார், வாசனும் ஒப்புக் கொண்டார்.
கதையை தேடி அலைந்த கிட்டுவின் கண்களில் ஜி.டபிள்யூ.எம். ரெனால்ட்ஸ் எழுதிய "தி மேல் பண்டிட்" என்ற நாவல் பட்டது. அது கொடூரமான கொள்ளைக்காரர்களை தீரமாக எதிர்த்து போராடிய ஒரு பெண்ணை பற்றியது. அந்த நாவலின் சாரம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஜெமினி கதை இலாகா உருவாக்கியதுதான் "சந்திரலேகா" கதை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!