
பிளாஷ்பேக்: 200வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா
1983ம் ஆண்டு ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் கார்த்திக், சுலக்ஷனா, நாகேஷ் நடிப்பில் வெளியான படம் "ஆயிரம் நிலவே வா". இந்தப் படம்தான் இளையராஜாவின் 200வது படம். 100வது படம் "மூடுபனி".
ஊட்டியில் உள்ள எஸ்டேட் பங்களா ஒன்றில் மேனேஜராக இருக்கிறார் கார்த்திக். அந்த பங்களாவுக்கு விருந்தினர்களாக வருகிறார்கள் நாயகி சுலக்ஷனாவும், நாகேசும். கார்த்திக்கும், சுலக்ஷனாவும் காதலிக்கிறார்கள். இந்த நேரத்தில் பங்களா முதலாளியின் மகனும் அங்கு வருகிறார். அவரும் சுலக்ஷனாவை காதலிக்கிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இளையராஜாவின் 200வது படம் என்ற விளம்பரத்துடன் வெளிவந்த படத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக படத்தை தனது இசையால் தாலாட்டினார் இளையராஜா. படத்தின் டைட்டில் கார்டில் "ராகரிஷி" இளையராஜா என்றும் பாடலை எழுதிய கங்கை அமரனை "பாவலர்" கங்கை அமரன் என்றும் நாயகன் கார்த்தியை "காதல் காளை" என்றும் சுலக்ஷனாவுக்கு "சிருங்கார தேவதை" என்றும் பட்டம் போட்டிருந்தார்கள்.
"தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி" என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. "கங்கை ஆற்றில் நின்றுகொண்டு நீரைத் தேடுகிறேன்" என்ற பாடல் தனித்துவமாக இருந்தது. "அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே" என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. "ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்ல.. போர்த்திப் படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்ல" என்ற பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இப்படி எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
"தேவதை இளம் தேவி" பாடல், 1981ம் ஆண்டு கன்னடத் திரைப்படமான "கீதா"வுக்காக இளையராஜா இசையமைத்த "கேளடே நிமகீகா" பாடலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற "அந்தரங்கம் யாவுமே" என்ற பாடல் பின்னர் கார்த்திக் நடித்த "அபிநந்தனா" என்ற தெலுங்கு படத்தில் "மஞ்சு குரிசே" என்று மீண்டும் பயன்படுத்தப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!