
பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா
மலையாள திரையுலகில் பலவருடங்களுக்கு முன் நடந்த பரபரப்பான சம்பவங்கள் குறித்து சமீப காலமாக தொடர்ந்து பேசி வரும் தயாரிப்பாளரும், இயக்குனர் ஆலப்பி அஸ்ரப் என்பவர் நடிகை லிசி, இயக்குனர் பிரியதர்ஷன் திருமணத்தில் நடைபெற்ற கலாட்டாக்களையும், அதில் பக்கபலமாக நின்று இயக்குனர் கொச்சின் ஹனீபா எப்படி சமாளித்தார் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசும்போது, “நடிகை லிசியும் பிரியதர்ஷனும் படங்களில் ஒன்றாக பணியாற்றிய சமயத்தில் காதல் வசப்பட்டனர். லிசி வீட்டில் அவரது தாயார் இந்த காதலை தீவிரமாக எதிர்த்தார். அதேசமயம் பிரியதர்ஷன் தரப்பிலோ அவரது நண்பர்கள் லிசியை பிரியதர்ஷன் திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை. இந்த நிலையில் சென்னையில் ஒரு படப்பிடிப்பில் சிவகுமார், ராதிகா, லிசி மற்றும் கொச்சின் ஹனிபா ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சில ஆட்களுடன் லிசியின் அம்மா வந்து விட்டார். லிசியை சமாதானப்படுத்தியோ அல்லது அவர் உடன்படாவிட்டால் வலுக்கட்டாயமாக தூக்கி செல்வதற்கோ அவர் ஆட்களுடன் வந்திருந்தார்.
ஆனால் லிசி மறுக்கவே அந்த நபர்களும் படப்பிடிப்பில் இருந்தவர்களை விரட்டி லிசியை இழுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். உடனே கொச்சின் ஹனிபா அவர்களிடம், “யாராவது லிசியை தொட்டீர்கள் என்றால் ஒருத்தனும் உயிருடன் போக மாட்டீர்கள் என கூறியதுடன் இரண்டு பேரையும் அதிரடியாக தாக்கியுள்ளார். மேலும் படக்குழுவினரும் கொச்சின் ஹனீபா உடன் சேர்ந்து கொண்டனர். இதை பார்த்ததும் வேறு வழியின்றி லிசியின் தாயார் மற்றும் அவருடன் வந்தவர்கள் சத்தம் காட்டாமல் வெளியேறினார்கள். அதன் பிறகு லிசி, பிரியதர்ஷன் திருமணம் நடைபெறுவதற்கு கொச்சின் ஹனீபா மிகப்பெரிய அளவில் உறுதுணையாக நின்றாராம். அப்படி 1990ல் நடைபெற்ற இவர்களது திருமணம் 2016ல் இருவரும் விவாகரத்து பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!