
பிளாஷ்பேக் : தோல்வியை சந்தித்த கே.பி.சுந்தராம்பாள்
"நந்தனார்" படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த கே.பி.சுந்தராம்பாள் 5 வருடங்களுக்கு பிறகு நடித்த படம் "மணிமேகலை", ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை சீத்தலை சாத்தனார் எழுதியிருந்தார். அந்த பெயரிலியே இந்த படம் தயாரானது. சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன், மாதவி தம்பதிகளின் மகள்தான் மணிமேகலை.
கோவலன் மறைவுக்கு பிறகு மாதவி தன் மகள் மணிமேகலையை புத்த துறவியாக வளர்த்தார். அவளை சோழ இளவரசன் உதயகுமாரன் காதலித்தான், பின்னர் அவளது துறவரத்தை மதித்து பிரிந்தான். அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தை பெற்ற மணிமேகலை அதை கொண்டு உலகின் பசியை ஆற்றினாள் என்பதுதான் மணிமேகலையின் கதை. இந்த கதையே படமானது.
மணிமேகலையாக கே.பி.சுந்தராம்பாள் நடித்தார், கொத்தமங்கலம் சீனு இளவரன் உதய குமாரானாக நடித்தார், ஏ.சுந்தரம் மாதவியாக நடித்தார், மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் ஆகியோரும் நடித்திருந்தனர், பொம்மன் இராணி இயக்கினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற "சிறைச்சாலை என்ன செய்யும்" பாடல்தான் காங்கிரஸ் கட்சியின் விடுதலை வேட்கை பாடலாக பாடப்பட்டது.
பெரிய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த படம் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார நெருக்கடியால் இரண்டு வரும் தயாரிப்பில் இருந்து பின்னர் வெளிவந்தது. படத்தை பார்த்த விநியோகஸ்தர்களும் படத்தை வாங்க முன்வரவில்லை. கோவலன் கண்ணகியை தெரிந்த அளவிற்கு மணிமேகலை பற்றி மக்களுக்கு தெரியாது. கண்ணகி வாழ்க்கையை கெடுத்த மாதவியின் மகள் மணிமேகலை என்பதால் அவள் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது என்று கருதியே விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கவில்லை. படம் வெளிவந்து அதே காரணங்களுக்காக தோல்வி அடைந்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!