
ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு
அல்லு அர்ஜுன் நடித்து நேற்று வெளியான "புஷ்பா 2" படத்திற்கு ஒரு நாள் முன்னதாக பிரிமியர் காட்சிகளுக்கும், நேற்று அதிகாலை காட்சிகளுக்கும் தெலங்கானா அரசு அனுமதி வழங்கியது.. ஆனால், நேற்று முன்தினம் நடந்த பிரிமியர் காட்சிகளின் போது ஹைதராபாத்தில் தியேட்டர் ஒன்றில் கடும் நெரிசல் ஏற்பட்ட போது போலீசார் நடத்திய தடியடியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். அந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெலங்கானா மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் கொமட்டிரெட்டி வெங்கட ரெட்டி, தெலங்கானாவில் இனி வரும் காலத்தில் எந்தவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே தற்போது தெலங்கானாவிலும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது திரையுலகினருக்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
ஐதராபாத் தியேட்டரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் மீதும் தியேட்டர் நிர்வாகத்தின் மீதும் ஐதராபாத் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த தியேட்டருக்கு படத்தின் நாயகன் மற்றும் குழுவினர் வர உள்ளார்கள் என்பதை தியேட்டர் நிர்வாகம் தெரிவிக்கவில்லை என காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!