
தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி - இளம் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்
விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் இயக்குனர் ஆனவர் சுரேஷ் சங்கையா. முதல் படத்திலேயே விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இவர் அடுத்து பிரேம்ஜி அமரன் நடித்த சத்திய சோதனை படத்தை இயக்கினார். இந்தபடமும் விமர்சகர்கள் இடையே பாராட்டை பெற்றது. சமீபத்தில் யோகிபாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இன்னும் இந்தப்படம் வெளியாகவில்லை. இதுதவிர மற்றொரு படத்தையும் இயக்கி உள்ளார்.
இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம், கிட்னி பிரச்னை ஆகியவற்றால் இவர் இறந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகும். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் ‛கங்குவா" பட எடிட்டர் நிஷாத் யூசப் மரணம் அடைந்தார். கடந்தவாரம் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பால் காலமானார். இரு தினங்களுக்கு முன் எடிட்டர் உதய சங்கர் காலமானார். இப்போது இளம் இயக்குனரான சுரேஷ் சங்கையா காலமாகி இருப்பது திரை ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தரமான இயக்குனரை இழந்த தமிழ் சினிமா : படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள்
அறிமுக இயக்குனர்கள் எப்போதும் ஒருவித பதட்டத்தோடு இருப்பார்கள். ஆனால் சுரேஷ் சங்கையா தன் முதல் பட பத்திரிகையாளர் காட்சி முடிந்து, வெளியில் வந்து பத்திரிக்கையாளர் வாழ்த்தும் போதும் எந்த பதட்டம் இன்றி சிரித்த முகத்துடன் நின்றார். முதல் படம் ஒரு கிடாயின் கருணை மனு பெருமையாக பேசப்பட்டது. அடுத்து வந்த சத்ய சோதனை சத்தியமாக இவர் மீது கொஞ்சம் நம்பிக்கை தந்தது. சினிமா சில நேரம் எல்லாம் கொடுக்கும், எல்லாம் எடுக்கும், உயிரையும் பறிக்கும். மஞ்சள் காமாலை மற்றும், கல்லீரல் பாதிப்பில் மரணம் அடைந்தார்.
கோவில்பட்டி சொந்த மண்ணில், அத்தனை நம்பிக்கையும் தகர்ந்து, அவரை இழந்து குடும்பத்தினர் தவிக்கின்றனர். குறிப்பாக சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்தார் சுரேஷ் மனைவி. இந்த குடும்பத்தை கை கொடுத்து காப்பாற்ற இறைவனும், திரைதுறையினரும் முன் வர வேண்டும். படைப்பாளிகளே கொஞ்சம் உங்கள் உடல் நலனில் அக்கறை எடுங்க.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!