
பிளாஷ்பேக் : சமூக கதைகளில் நடிக்க மறுத்த நடிகர்
”மணமகள்” என்ற படத்தில் "சின்னஞ்சிறு கிளியே" என்ற பாடலைப் பாடி முதன் முறையாக பாரதியாரின் பாடலை திரைக்கு கொண்டு வந்தவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய கர்நாடக இசை பாடல்களை திரையிசை பாடல்களாக மாற்றி பாடியவரும் இவர்தான்.
பாடகராக இருந்தபோதும், நாடகத்தில் நடிகராக இருந்த இவர் சினிமாவிலும் நடிக்கவே வந்தார். அதாவது பாடிக்கொண்டே நடிப்பதற்கு. வி.என்.சுந்தரம். தஞ்சை மாவட்டத்தில் விசலூரில் பிறந்தவர். இரண்டரை வயதில் தாயை இழந்தவர். அத்தையின் வீட்டில் வளர்ந்தார். பளிச்சென்ற குரலும், உயரமான சிவந்த மேனியும் வி.என்.சுந்தரத்திற்கு நாடகங்களில் ராஜபார்ட் வேடங்களைப் பெற்றுக் கொடுத்தன.
பின்னர் சினிமாவுக்கு வந்த இவர் 1935ம் ஆண்டு வெளிவந்த "மார்கண்டேயன்" படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின்னர் சந்திரஹாசா, சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுனா, மணி மாலை, ராஜசூயம், தன அமராவதி படங்களில் நடித்தார்.
புராண பட காலம் முடிந்து சமூக படங்கள் வரத் தொடங்கியதும் அவற்றில் நடிக்க பிடிக்காமல் நடிப்பை கைவிட்டு விட்டு பின்னணி பாடல்கள் மட்டுமே பாடினார். 1964ம் ஆண்டு வரை பாடிக் கொண்டிருந்தார். பாடல்களில் மேற்கத்திய பாணி புகுந்தபோது அது பிடிக்காமல் பாடுவதையும் நிறுத்திக் கொண்டார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு "கலைச் செம்மல்" விருது கொடுத்தது. ஆனால் தமிழக அரசு கொடுக்க முன்வந்த "கலைமாமணி" விருதை ஏற்க மறுத்து விட்டார். 2009ம் ஆண்டு தனது 92வது வயதில் காலமானார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!