
மலையாளிகள் உருவாக்கும் தமிழ் அரசியல் படம்
இது குறித்து இயக்குனர் சந்தோஷ் கோபிநாத் கூறியதாவது : நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது.
இதைக் கண்டு கதாநாயகன் பிரஜின் குமுறுகிறார்.தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார். அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது . அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட்.
அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் தான் இந்த சேவகர். இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் கேரளத்தில் இருந்து வந்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க தென்காசி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.எங்கள் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பட முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக "சேவகர்" படத்தை உருவாக்கியுள்ளோம் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!