
சிவகார்த்திகேயன் பேச்சு - தனுஷின் பழைய வீடியோக்களை பதிவிடும் ரசிகர்கள்
சமூக வலைத்தளங்களில் நடக்கும் சண்டைகள் ரசிகர்களுக்கானவை. அவற்றை வைத்து ஒரு ஹீரோ ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கு நேற்றைய நிகழ்வு ஒன்று ஒரு உதாணரம். நேற்று நடந்த "கொட்டுக்காளி" பட டிரைலர் விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “கொட்டுக்காளி மாதிரி எஸ்கே புரொடக்ஷன்ஸ்ல இருந்து இன்னும் நிறைய படைப்புகள் வரும். நான் வந்து யாரையும் கண்டுபுடிச்சி, நான்தான் வாழ்க்கை கொடுத்தேன், இவங்களை நான்தான் ரெடி பண்ணேன் அந்த மாதிரிலாம் நான் சொல்ல மாட்டேன். ஏன்னா என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க, நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு. அந்த மாதிரி ஆள் நான் இல்ல,” என்றார்.
அவர் யார் பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. இருந்தாலும் அது நடிகர் தனுஷைத்தான் குறிப்பிடுகிறது என்பது ரசிகர்களுக்குப் புரியாமல் இருக்குமா ?. நேற்று சிவகார்த்திகேயன் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகு தனுஷ் ரசிகர்கள் பலரும் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பற்றி தனுஷ் பேசிய சில வீடியோக்கள், தனுஷ் பற்றி நன்றியுடன் சிவகார்த்திகேயன் பேசிய சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"கொட்டுக்காளி" படம் சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும், சில விருதுகளையும் பெற்றுள்ளது. அப்படியான ஒரு படத்தின் டிரைலர் விழாவில் இந்தப் படத்தை ஓட வைப்பதற்காக மிஷ்கின், "நிர்வாணமாகக் கூட ஆடுவேன்," என்றும், சிவகார்த்திகேயன் தேவையற்ற ஒரு சர்ச்சைப் பேச்சைப் பேசியதையும் திரையுலகத்திலேயே பலர் விமர்சிக்கிறார்கள். இப்படியெல்லாம் பரபரப்பாகப் பேசித்தான் அந்தப் படத்திற்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டுமா என்றும் கேட்கிறார்கள்.
"கொட்டுக்காளி" போன்ற சர்வதேசத் திரைப்படத்தை அவர்களே இந்த அளவிற்கு கீழிறிக்கி விட்டார்கள் என்றும் வருத்தப்படுகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!