
பிளாஷ்பேக் : நடிகையின் வாய்ப்பை பறித்த மாணவி
ஏவிஎம் நிறுவனம் "சத்திய சோதனை" என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து அதனை சின்ஹா என்ற இயக்குனர் இயக்குவது என்பதாக முடிவானது. பொதுவாக ஏவிஎம் படங்களின் அனைத்து முடிவுகளையும் மெய்யப்ப செட்டியார்தான் எடுப்பார். அதன்படி "சத்ய சோதனை" படத்தின் நாயகியாக தாம்பரம் லலிதா என்பரை முடிவு செய்து வைத்திருந்தார். அவரின் நடன நிகழ்ச்சி ஒன்றை பார்த்துதான் தாம்பரம் லலிதாவை அவர் தேர்வு செய்திருந்தார்.
பின்னர் இயக்குனர் சின்ஹாவை அழைத்து தாம்பரம் லலிதாவின் நடன நிகழ்ச்சியை பார்த்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த நடன நிகழ்ச்சியில் தாம்பரம் லலிதாவுடன் நடன பள்ளி மாணவிகள் சிலரும் ஆடினார். அப்படி ஆடிய மாணவிகளில் ஒருவரை சின்ஹாவுக்கு பிடித்து விட்டது. அவர் இளமையாகவும், அழகாகவும் இருப்பதோடு படத்தின் கேரக்டருக்கு ஏற்ற முகத் தோற்றத்தோடும் இருந்தார்.
இந்த தகவலை அவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரிடம் சொன்னார். அதை செட்டடியார் ஏற்கவில்லை. அந்த பெண்ணை நேரில் அழைத்து வாருங்கள் நான் முடிவு சொல்கிறேன் என்று கூறிவிட்டார். சித்தூரை சேர்ந்த அந்த மாணவி திருவல்லிக்கேனியில் உள்ள சரஸ்வதி கான சபாவில்தான் நடனம் பயின்று வந்தார். அவரது வீடு அருகில் இருந்தது. சின்ஹா அழைத்தபோது... ஆச்சாரமான தெலுங்கு குடும்பம் மகள் சினிமாவில் நடிப்பதை ஏற்கவில்லை. பிறகு ஒரு வழியாக அரை மனதுடன் சம்மதித்தனர். மாணவியை பார்த்த நொடியே ஓகே சொன்னார் செட்டியார்.
அந்த மாணவிதான் பிற்காலத்தில் 250 படங்களுக்கு மேல் நடித்து, சென்னையிலும், அமெரிக்காவிலும் நடன பள்ளிகள் நடத்திய ராஜசுலோச்சனா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!