
இந்தியன் 2விற்கு தடை கேட்டு திடீர் வழக்கு
இந்த நிலையில் "இந்தியன் 2" படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை எச்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்த வர்ம கலைஞர் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட 4வது முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மஞ்சா வர்மக்கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடத்தை கடந்த 55 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதில் வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கடந்த 1996ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் படப்பிடிப்புக்காக கமல்ஹாசனுக்கு வர்மக்கலைகளை கற்றுக் கொடுத்தேன். இந்த வர்மக்கலை அனைத்தும் ரகசியமானவை . இதனால் அந்த படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியன் படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது என செய்தி வெளியானது. "இந்தியன் 2" படத்தில் நான் ஏற்கனவே சொல்லி கொடுத்த முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக என்னிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இந்த படத்தில் எனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை "இந்தியன் 2" படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விளக்கம் அளிக்க இயக்குனர் ஷங்கர் சார்பில் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை அனுமதித்த நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு (11ம் தேதி) தள்ளி வைத்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!