
சால்வையை பறித்து எறிந்தது தவறு தான் : வருத்தம் தெரிவித்த சிவகுமார்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார், 82. பொது இடங்களில் இவர் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சையாகி வருகிறது. முன்பு இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டார். இது சர்ச்சையாக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். அதேப்போல் மற்றொரு நிகழ்விலும் செல்பி எடுக்க முயன்ற இன்னொரு நபரின் செல்போனையும் தட்டிவிட்டார்.
காரைக்குடியில் இருதினங்களுக்கு முன் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றார் சிவகுமார். இந்த நிகழ்ச்சியில் வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் சிவகுமார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிவகுமார்.
அவர் வெளியிட்ட வீடியோவில் அந்த வயதான முதியவரும் உள்ளார். அதில், ‛‛இவர் வேறு யாருமல்ல... எனது தம்பி, 50 ஆண்டுகால நண்பர் கரீம் தான். அன்றைக்கு விழா 6 மணிக்கு தொடங்கி முடியவே 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது. இது கரீமிற்கும் தெரியும். அதையும் மீறி அவர் சால்வை கொண்டு வந்தது அவருடைய தவறு என்றால் பொது இடத்தில் அதை வீசி எறிந்தது என்னுடைய தவறு தான். இதற்காக நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன்"" என தெரிவித்துள்ளார் சிவகுமார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!