
துருவ நட்சத்திரம் அடுத்த மாதம் ரிலீஸ்: கோர்ட்டில் தகவல்
இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவன பங்குதாரர் விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “சிம்புவை நாயகனாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். முன்பணமாக 2018ல் 2 கோடியே 40 லட்சம் அளித்தோம். ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பி தரவில்லை. அதை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திருப்பி அளிக்கும்பட்சத்தில், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என நவம்பர் 22ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், பணத்தை திரும்ப செலுத்தாததால், இதுவரை படத்தை வெளியிடமுடியவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் வழக்கை 3 வாரம் தள்ளிவைக்க கோரினார். இதையடுத்து, விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!