
விதிமுறை மீறி கொடைக்கானலில் பங்களா : பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது அரசு நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு முகமது ஜூனைது தாக்கல் செய்த பொதுநல மனு: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பேத்துறைப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவிற்கு சொந்த நிலம் உள்ளது. அதில் இருவரும் பங்களாக்கள் கட்டுகின்றனர். அரசுத்துறையிடமிருந்து கட்டட அனுமதி பெறவில்லை. மலைப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் இயற்கை பேரிடரின்போது மண் அரிமானத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். நடிகர்கள் என்பதால் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. திண்டுக்கல் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முகமது ஜூனைது குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: பாபி சிம்ஹா தாய் கிருஷ்ணகுமாரி பெயரில் கட்டடம் அமைக்க வில்பட்டி ஊராட்சியில் 2019ல் 2400 சதுர அடிக்கு அனுமதி பெறப்பட்டது. அனுமதித்த அளவைவிட கூடுதலாக கட்டப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் அனுமதி பெறவில்லை. இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பி, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு திட்ட விதி படி "சீல்" வைக்க கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: தற்போதைய நிலை குறித்து கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜன.,10 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!