
லியோ - விஜய் தலையீட்டால் நிறைய மாற்றம் ?
படம் வெளிவந்த பின், “லோகேஷ் படமா இது,” என பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அவர் இதற்கு முன்பு இயக்கிய படங்களில் இருந்த "பிரில்லியன்ஸ்" இந்தப் படத்தின் திரைக்கதையில் இல்லை. என்னென்னமோ சொல்லி கதையை இழுத்திருக்கிறார்கள் என ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்தார்கள்.
அந்த சர்ச்சைகளுக்குத் தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் “விஜய் உட்பட பலரும் டிஸ்கஸ் செய்து சில காட்சிகளை மாற்றினோம்,” என்று சொல்லியிருக்கிறார்.
“பீஸ்ட்" படம் முடிச்சிட்டு "வாரிசு" படத்துக்கு முன்னாடியே இந்தப் படம் எடுக்கலாம்னு இருந்தோம். "விக்ரம்" படம் முடிய கொஞ்சம் டிலே ஆனதால விஜய் சார் "வாரிசு" போயிட்டு வந்தாரு. அவர் கதை செலக்ட் பண்ணிட்டாரு, அப்புறம்தான் லோகேஷ் வந்து என்கிட்ட கதை சொன்னாரு. நானும் ஜெகதீஷும் தான் கதை கேட்டோம்.
கதை கேட்டோம், நல்லாருக்குன்னு சொல்லிதான் வந்தேன். விஜய் சார் நைட்டு போன் பண்ணி கதை கேட்டியே எப்படியிருக்குன்னு கேட்டாரு. இந்த இடத்துல கொஞ்சம் ஆல்டர் பண்ணா நல்லாருக்கும்னு தோணுது, என் ஜட்ஜ்மென்ட் தெரியலன்னு சொன்னேன். உடனே லோகேஷ் கிட்ட பேசினாரு. இந்த மாதிரி இருக்கு, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு லோகேஷ் கிட்ட கேட்டாரு. பத்து நாளைக்கு அப்புறம் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி சார் கிட்ட சொன்னாரு. அதுக்கப்புறம் ஷுட் போனோம்.
இந்தப் படத்துக்கு நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணோம், பண்ணலன்னு சொல்ல மாட்டேன். அதையெல்லாம் (விஜய்) சாரை வச்சிக்கிட்டுதான் டிஸ்கஸ் பண்ணோம். உதாரணத்துக்கு மார்க்கெட் பைட் நல்லாருக்குன்னு அதிகமாக்கச் சொன்னோம், அப்புறம் மாத்துனாங்க, இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைச் சொன்னோம்,” என்று லலித்குமார் தெரிவித்துள்ளார்.
இப்படி பல மாற்றங்களை விஜய் தரப்பிலிருந்து சொன்னதால்தான் இது முழுமையான லோகேஷ் கனகராஜ் படமாக இல்லாமல் தயாராகி வந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த "விக்ரம்" படத்திலேயே இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டு, எந்த ஒரு மாற்றத்தையும் கமல் சொல்லவில்லை. ஆனால், "லியோ" படத்தில் விஜய் தலையீடு அதிகம் இருந்தது என்பதற்கு தயாரிப்பாளர் லலித் பேட்டியை முன்னுதாரணமாய் சொல்லி வருகிறார்கள்.
அதே சமயம், விஜய் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த "பீஸ்ட், வாரிசு" ஆகியவை தரமான படமாக இல்லையென்பதால் விஜய் இந்தப் படத்தில் ஆலோசனைகளை மட்டுமே சொன்னார் என சிலர் சொல்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!