
இறுகப்பற்று படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி
படத்தின் அறிமுக விழாவில் நடிகை அபர்ணதி பேசியதாவது: "தேன்" படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். இயக்குநர் யுவராஜ் முதலில் ஸ்கிரிப்ட் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என கூறினேன். அடுத்த நிமிடமே இந்த படத்திற்காக எனது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று கூறினார். இது என்ன சாதாரணம்தானே என நினைத்து உடல் எடையை கூட்ட ஆரம்பித்தாலும் மூன்று மாதம் ஆகியும் கூட என்னால் அவர் சொன்ன அளவிற்கு எடையை கூட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு நான் செட்டாக மாட்டேன் என்றே சொல்லிவிட்டார்கள்.
அந்த சமயத்தில் தான் ஒரு சரியான டயட்டீசியனை விதார்த் எனக்கு கைகாட்டினார். அவரது ஆலோசனையை கடைபிடித்து எடையை கூட்டினேன். காலையில் துவங்கி எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கே அதிக பட்ஜெட் ஆனது. ஒரு கட்டத்தில் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்ன சூர்யாவா ? விக்ரமா? எடையை கூட்டி குறைப்பதற்கு. ஆனாலும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்து பண்ணினேன்.
இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு விதார்த்தான் காரணம். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை. நிச்சயமாக இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த படம் துவங்கியதிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளியே வர ஒன்றை வருடம் ஆனது. இடையில் விளம்பர படம், ஆல்பம், வேறு சில படவாய்ப்புகளும் வந்தது. ஆனால் உடல் எடை கூடியிருந்ததால் அந்த வாய்ப்புகளை இழக்க வேண்டியது வந்தது. என்றாலும் எல்லாவற்றுக்கும் சேர்த்து "இறுகப்பற்று" எனக்கு திருப்புமுனை படமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!