
கல்கி 2898 எடி ஆக மாறிய புராஜக்ட் கே - என்ன சொல்லப் போகிறது ?
"கல்கி" என்பது விஷ்ணு பகவானின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரப் பெயர். கலியுகத்தில் தோன்றி தீயவை அனைத்தையும் கல்கி அவதாரம் அழிக்கும் என்று சொல்வார்கள். இந்து புராணங்களின்படி வருடங்களை யுகங்களாகப் பிரித்துள்ளார்கள். அதன்படி "கிருதயுகம்" 17 லட்சத்து 18 ஆயிரம் வருடங்கள், "திரேதாயுகம்" 12 லட்சத்து 90 ஆயிரம் வருடங்கள், "துவாபரயுகம்" 8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள், "கலியுகம்" 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். தற்போது நடந்து வருவது "கலியுகம்" என்று சொல்கிறார்கள். கலியுகம் முடிவடையும் போதுதான் கல்கி அவதாரம் நிகழும், வெள்ளை குதிரையில் வந்து போர் புரிந்து தீய சக்திகளை அவர் அழிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.
"கல்கி 2898 எடி" எனத் தலைப்பு வைத்து "கல்கி" அவதாரத்தைப் பற்றிய படமாக இப்படத்தை உருவாக்குகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வீடியோ முன்னோட்டத்தைப் பார்த்ததும் தோன்றுகிறது. “இந்த உலகத்தை இருள் சூழ்ந்த போது, ஒரு சக்தி எழும், இப்போது முடிவு ஆரம்பமாகிறது,” என்ற வாசகங்களுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபாஸ், தீபிகா, அமிதாப், பசுபதி உள்ளிட்டோரது காட்சிகள் இடம் பெற்றுள்ளன. "சக்தி" ஆக பிரபாஸ், "இருள்" ஆக கமல்ஹாசன் என யூகிக்க முடிகிறது. வீடியோவின் முடிவில் 2898ம் வருடம் வந்து பின் 2024ம் வருடமாக மாறுகிறது. அது பட வெளியீட்டையும் குறிக்கலாம். விஎப்எக்ஸ் காட்சிகள், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிரட்டலாய் உள்ளது.
இப்படத்தின் பிரபாஸ் போஸ்டர் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் இந்த வீடியோ அதை மாற்றிவிட்டது. இந்திய சினிமாவின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இப்படம் "பாகுபலி, ஆர்ஆர்ஆர்" படங்களை அடுத்து தெலுங்குத் திரையுலகத்தின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!