
பாய் : ஸ்லீப்பர் செல் - மூன்று மத தலைவர்கள் வெளியிட்ட பட போஸ்டர்
படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் கூறியதாவது: இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மதம் இருக்கிறது. மதம் என்கிற கருவியை வைத்து மனிதர்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் விரக்தி என்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து ஒரு சித்தாந்தத்திற்கு அடிமையாக்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள் அதைப்பற்றி இந்தப் படம் பேசுகிறது. படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம் தான் மேலானது என்பதுதான்.
இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். படத்தின் திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிது, பார்வையாளர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். படத்திற்கு "யுஏ" சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. என்றார்.
இந்த படத்தின் போஸ்டரை இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கே .ஏ.எம் .முகமது அபுபக்கர், கிறிஸ்தவ மதத்தின் சார்பில் பிஷப் டாக்டர் எஸ்.எம்.ஜெயக்குமார் ஆகிய மூவரும் வெளியிட்டனர்.
படத்தின் போஸ்டரில் மூன்று மதக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. நெற்றியில் பட்டை, தலையில் குல்லா, கையில் சிலுவை, பின்னணியில் வெடி பொருட்கள், பணம், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இது சர்ச்சையை கிளப்பி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!