
விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினி, "அரசியலுக்கு வரப்போவதில்லை" என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டசபை தேர்தலின் போதே, ஆதரவு கேட்ட கமலுக்கு, ரஜினி தரப்பிலான பதில் ஏமாற்றத்தையே தந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் பிரபலங்களின் ஆதரவை பெறுவதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதிலும், ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பதிலும், அவர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதிலும், பா.ஜ.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
"மக்களிடம் இன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவர் ரஜினி" என, பா.ஜ.,வினர் பேசத் துவங்கி உள்ளனர். அதிலும், ரஜினி நடிக்கும் பட வேலை ஆரம்பமாகும்போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு அதிகரிக்கும். அந்த வகையில், ஜெயிலர் பட வேலைகள் துவங்குவதால், தற்போது ரஜினி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. "வரும் ஏப்ரலுக்குள், ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்" என, அவரது அண்ணன் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, "கர்நாடக கவர்னராக ரஜினியை அறிவிக்கப் போகின்றனர்" என்ற பேச்சும் பரவி வருகிறது. இப்போதைக்கு, ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் வரை, அவர் குறித்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.
- நமது நிருபர் -



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!