
11 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவுக்குக் கிடைக்கும் வெற்றி
2010ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த "விண்ணைத் தாண்டி வருவாயா" படத்திற்குப் பிறகு அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை சிம்பு தரவில்லை என்பதுதான் உண்மை. அந்தக் குறையை நேற்று வெளியான "மாநாடு" படம் போக்கியிருக்கிறது. அனைத்து ரசிகர்களுக்குமான படமாக இந்தப் படம் அமைந்துள்ளது என தியேட்டர்காரர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.
2010க்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவந்த “வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்” ஆகிய படங்கள் மிகச் சுமார் வெற்றி, தோல்வி, படுதோல்வி வகைப்படங்கள் தான்.
2018ல் வந்த "செக்கச் சிவந்த வானம்" படத்தை சிம்பு படம் என்று சொல்ல முடியாது. அதை மணிரத்னம் படம் என்றுதான் சொல்ல முடியும். விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோரும் அப்படத்தின் நாயகர்கள்.
"மாநாடு" படம் பற்றி ஆரம்பத்திலேயே சிம்பு யூகித்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்களில் காட்டாத ஈடுபாட்டை இந்த "மாநாடு" படத்தில் அவர் காட்டியிருப்பது காட்சிக்குக் காட்சி தெரியும். இந்த வெற்றியை அப்படியே பிடித்துக் கொண்டே மேலேறிப் போவதுதான் அவருக்கு சிறப்பு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!