
இரண்டு போர் யானைகள்.. நடுவில் வாகை மலர்..: த.வெ.க கொடியை அறிமுகம் செய்துவைத்தார் விஜய்
ஆக 22, 2024
Advertisement
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கினார். கடந்த 19ம் தேதி பவுர்ணமி நாளில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கொடியை அதற்கான கம்பத்தில் விஜய் ஏற்றினார்.
இன்று பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடியை அறிமுகம் செய்து, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார். கட்சி கொடியில், சிவப்பு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் இரண்டு பிளிரும் போர் யானைகள், நடுவில் வாகை மலரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. முன்னதாக கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் விழாவில் விஜய் பேசியதாவது: இன்று எல்லோருக்கும் சந்தோஷமான நாள். கட்சி அறிவித்த நாளில் இருந்து, மாநில மாநாடு என்ற குறிப்பிட்ட நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர். தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைவரும் சேர்ந்து உழைப்போம். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் இந்த கொடிக்கான விளக்கத்தை சொல்கிறோம். தமிழகத்தின் வெற்றிக்கான கொடியாகவே இதனை பார்க்கிறேன். அதுவரை நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!