
மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா
செப் 15, 2024
Advertisement
நடிப்பதை விட சமூக நலன் காக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களில் ஒருவர் நடிகை சஞ்சனா கல்ராணி. கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் கூட.
கொரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மூன்று வேளையும் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல இடங்களில் தன் பவுண்டேஷன் மூலம் அன்னதானம் வழங்கி பாராட்டையும் பெற்றவர்.
தற்போது சினிமா உலகில் எழுந்துள்ள பாலியல் விவகாரங்களுக்கு குரல் கொடுக்க தன் பவுண்டேஷன் மூலம் "சாண்டல்வுட் விமன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்" (எஸ்.டபிள்யூ.ஏ.ஏ.,) என்ற தன்னார்வ அமைப்பை துவங்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து திரும்பிய சஞ்சனாவிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
மலையாளத்தில் நான் நடித்துள்ள ஒரு படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுதவிர கன்னடத்தில் இரண்டு சினிமா அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவுள்ளன. தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ரொம்ப ஆசை. தமிழ் பட வாய்ப்புகளை எதிர்பார்த்தும் இருக்கிறேன்.
கடந்த 16 ஆண்டுகளில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழில் இதுவரை 65 படங்களில் நடித்திருப்பது பிரம்மிப்பாக தான் இருக்கிறது.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அக்கா நிக்கி கல்ராணியுடன் இணைந்து பொழுதை கழிப்பதுண்டு. சமீபத்தில் கூட குடும்பத்தினருடன் பாங்காங் சுற்றுலா சென்று வந்தோம். ஜப்பான், ஆப்பிரிக்காவிலுள்ள மசாய்மரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
சிறிய வயதிலேயே சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. நடிகையான பிறகு மற்றவர்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகளில் ஈடுபடுவது எளிதாகவும் உள்ளது. அந்தளவுக்கு மக்கள் என் பணிகளுக்கு ஆதரவு தருவது என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது.
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்ல முன்வந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது தான்.
என்றாலும் கூட இதுபோன்ற நேரங்களில் "தைரியமாக தனக்கு நேர்ந்த கொடுமையை கூறுகிறார் நடிகை" என சில நாட்களுக்கு பாராட்டுவர். அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையே கஷ்டமாகி விடும். அவருக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் பாதிக்கப்படும். அதுபோன்ற நிலை ஏற்பட விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
சென்னையில் சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் கூட பாலியல் புகாரில் ஈடுபடுவோர் மீது ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் கன்னட சினிமாவை பொறுத்தவரையில் சங்க அமைப்புகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இதுவரை இல்லாதது துரதிஷ்டவசமானது. இதற்காக தான் சஞ்சனா பவுண்டேஷன் சார்பில் நடிகைகளுக்கான அசோசியேஷன் துவக்குகிறேன்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் உள்ளிட்ட கன்னட சினிமாத்துறையினர் ஆதரவு அளிப்பதாக நம்பிக்கையளித்துள்ளனர். இதற்காக தான் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரை சந்தித்தேன்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை. அதை அப்போது பார்த்து கொள்ளலாம் என்றார்.
"தைரியமாக தனக்கு நேர்ந்த கொடுமையை கூறுகிறார் நடிகை" என சில நாட்களுக்கு பாராட்டுவர். அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையே கஷ்டமாகி விடும். அவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்படும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!