
நடிகர் சித்தார்த்திடம் போலீசார் விசாரணை
"பாய்ஸ்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த், 42. பஞ்சாபில் பிரதமர் மோடி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், "நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது" என கூறியிருந்தார். அதற்கு நடிகர் சித்தார்த் எதிர் கருத்து பதிவு செய்தபோது, சாய்னா நேவலை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேசிய பெண்கள் ஆணையம், டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியது. அதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சைபர் கிரைம் போலீசார், சாய்னா நேவல் குறித்து சித்தார்த் பதிவு செய்த தரக்குறைவான கருத்துகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, "சம்மன்" அனுப்பினர். "வீடியோ கான்பரன்ஸ்" வாயிலாக விசாரணை நடத்தவும் முடிவு செய்தனர்.
அதன்படி, இன்ஸ்பெக்டர் வினோத்குமார், "வீடியோ கான்பரன்ஸ்" வாயிலாக, சித்தார்த்திடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது, "இழிவுப்படுத்தும் நோக்கத்தில் கருத்து பதிவு செய்யவில்லை. அதற்காக, என் வார்த்தைகளை நான் நியாயப்படுத்தவில்லை. இதுபற்றி சாய்னா நேவலிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்" என, சித்தார்த் கூறியுள்ளார்.
இவரது வாக்குமூலத்தை, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சித்தார்த் மீது, தெலுங்கானா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!