
ஓடிடி தான் இனி சினிமாவின் எதிர்காலம் : மணிரத்னம் கணிப்பு
சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து மணிரத்னம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 30 ஆண்டுகளுக்கு மேல் நான் சினிமாவில் நீடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். பலர் இவ்வாறு இருந்திருக்கிறார்கள். குரசோவா கடைசி நாட்கள் வரை படம் இயக்கினார். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இன்று வரை சிறந்த படங்களை இயக்கி வருகிறார்.
இந்தியாவில் யாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் இருந்தனர். இயக்குநராக இருக்க வேண்டும் என்கிற நமது விருப்பத்தைப் பொறுத்துதான் இது சாத்தியமாகும். உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற தாகம் இருந்தால், அதற்கான வழியை நீங்கள் கண்டறிவீர்கள். இந்தக் காலகட்டத்தில் படப்பிடிப்பு நடத்துவது மிகக் கடினம். ஏனென்றால் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொன்னியின் செல்வனுக்கு இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. விரைவில் முடிப்போம் என்று நம்புகிறேன். எனது முந்தைய படங்களை விட பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமானது. பெரிய படமோ, சிறிய படமோ, இரண்டுமே கடினம் தான்.
நவராச ஓடிடி வெளியீடு பற்றி கேட்கிறார்கள். ஓடிடி தான் சினிமாவின் எதிர்காலம். அது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்குப் பெரிய சாதகமான தளம். இரண்டு மணி நேரத் திரைப்பட வடிவத்துக்குப் பொருந்தாத பல சிந்தனைகள் உள்ளன. நீண்ட நேரம் ஓடக்கூடிய வெப் தொடர்களையோ அல்லது ஆந்தாலஜி படங்களையோ எடுக்கலாம். பெரிது, சிறிது என எல்லாவகையான கதைகளையும் சொல்ல ஓடிடி வழி வகுத்துள்ளது. இதனால் மாறுபட்ட கதைகள் மட்டுமல்ல, இயக்குநர்கள் படத்தை இயக்கும் விதத்திலும் மாறுதல்கள் வரும்.
இவ்வாறு மணிரத்னம் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!