
பிச்சைக்காரனாக நடிக்க நிஜமாகவே பிச்சை எடுத்த கவின்
படம் பற்றி இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் கூறியதாவது : இந்தப் படம் பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல. அவர்கள் பிரச்னையை பேசும் படமும் அல்ல. படத்தின் நாயகன் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக வாழ்கிறவன். ஆசைகள் எதுவும் இல்லாததால் நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஆசை உள்ளவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது அவனது பாலிசி. மற்றவர்களின் நடவடிக்கைகளை கிண்டல் செய்து கொண்டு தன் போக்கில் வாழ்கிறான். அப்படிப்பட்டவனுக்கு செய்ய வேண்டிய வேலை ஒன்று வருகிறது. அது என்ன அதன் பிறகு அவனுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையை எழுதும்போது வேறு சில நடிகர்களை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் பிச்சைக்காரராக நடிக்க அவர்கள் முன் வருவார்களா என்ற தயக்கம் இருந்தது. கவினிடம் இந்த கதையை சொன்ன போது அவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டு ஒத்துக் கொண்டார். பலமுறை கதையை கேட்டு உள்வாங்கி அவரும் தனியாக சில ரெபெரென்ஸ்களை வைத்துக்கொண்டு இந்த படத்தில் நடித்தார்.
பல பிச்சைக்காரர் கெட்அப் போட்டு பார்த்தோம். கடைசியாக இப்போதுள்ள தோற்றத்தை முடிவு செய்தோம். அது ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்க்க கவினை பொதுமக்கள் மத்தியில் பிச்சைக்காரராக உலவ விட்டோம். அப்போது ஒரு பெண் அவருக்கு இருபது ரூபாய் பிச்சை போட்டதும் எங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது.
இந்தப் படத்தில் நாயகி என்று யாரும் இல்லை. ஆனால் கதையோடு கடந்து செல்கிற பெண் கதாபாத்திரங்கள் உண்டு. கவினுக்கு காதல் உண்டு அதுவும் கதையோடு கடந்து செல்லும். பிளாக் காமெடி திரில்லர் என்ற வகையில் இந்த படம் உருவாகி உள்ளது. எல்லா அம்சங்களும் அமைந்த பக்கா கமர்சியல் படம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!