
பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம்
மார் 04, 2026
Advertisement
ஒரு காலத்தில் மக்கள் கடன் வாங்க வங்கியின் வாசல்களில் காத்துக் கிடந்தார்கள். இப்போது வங்கிகள் "எங்களிடம் கடன் வாங்குங்கள்" என்று வாடிக்கையாளர்களின் வாசலில் காத்துக் கிடக்கிறது. "கடன் மோசமான சமூக நோய்" என்பது ஆங்கில பழமொழி, கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம். இந்த கடன் பிரச்சினை பற்றி ஏராளமான படங்கள் வந்துவிட்டது. என்றாலும் முதன் முதலாக கடன் பிரச்சினை பற்றி முழுமையாக பேசிய படம் "கடன் வாங்கி கல்யாணம்".
கல்யாணம் பண்ணிப்பார், மனோகரா, மிஸ்ஸியம்மா உட்பட பல படங்களை இயக்கிய எல்.வி.பிரசாத் இந்த படத்தை இயக்கினார். திரைக்கதையை, சக்கரபாணி, பிரசாத், சதாசிவபிரம்மம் என 3 பேர் அமைத்திருந்தார்கள். வசனம், பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, தங்கவேலு, ரங்காராவ், ஈ.வி.சரோஜா, டி.ஆர்.ராமச்சந்திரன்உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகன் அல்லது மகளுக்கு திருமணம் என்று சொல்லி எல்லோரிடமும் கடன் வாங்கும் குடும்பத் தலைவரான டி.எஸ்.பாலையா அதை திருப்பித் தரவே மாட்டார். கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க கூடாது என்பதே அவர் பாலிசி. அவரிடம் பலமுறை கடன் கொடுத்து ஏமாந்தவர்களிடம்கூட எதையாவது சொல்லி கடன் வாங்கி விடுவது அவரது தனித்திறமை.
கடன் வாங்கி சொகுசாக வாழும் பாலையா உள்ளிட்டவர்களுக்குப் பாடம் கற்பிக்க, ஜெமினி பல மாறுவேடங்களைப் போட்டு எப்படி திருத்துகிறார் என்பதுதான் கதை. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவானது இந்தப் படம். தெலுங்குக்கு சாவித்திரி, ஜமுனாவை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற நடிகர்களை மாற்றி விட்டார்கள். "அப்பு சேசி பப்பு கூடு" என்ற அந்தத் தெலுங்குப் படத்தில் ஹீரோவாக என்.டி.ராமராவ் நடித்தார்.
இன்றைக்கு பார்த்தாலும் இன்றைய சமூகத்தோடு அற்புதமாக பொருந்திப்போகிற கதை. இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றாலும், படத்தை தயாரித்த விஜயா புரொடக்ஷன் கடன் எதுவும் வாங்காமல் தப்பித்தது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!