
அல்லு அர்ஜுன் ஹிந்திப் பட சிக்கலுக்குத் தீர்வு
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பல படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து யு டியூபில் வெளியிட்ட கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம் அல்லு அர்ஜுன் நடித்த "அலா வைகுந்தபுரம்லோ" படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் ஜனவரி 26ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
அதே சமயம் அப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான "ஷெஸதா" படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த், தியேட்டர்களில் அடுத்த வாரம் வெளியாக உள்ள டப்பிங் பட வெளியீட்டை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளாராம். இந்த டப்பிங் படம் வெளியாகிவிட்டால் ஒரிஜனல் ஹிந்தி ரீமேக் படம் வெளியாகும் போது அதன் வரவேற்பிற்கு சிக்கல் இருக்கும்.
"புஷ்பா" படத்திற்கும் இது போன்ற ஹிந்தி உரிமைப் பிரச்சினையில் சிக்கல் உருவாகி பின்னர் தீர்த்து வைக்கப்பட்டது. அதையும் கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. "அலா வைகுந்தபுரம்லோ" ஹிந்தி டப்பிங்கையும் அந்நிறுவனம்தான் வெளியிடுகிறது. "ஷெஸதா" படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையையும் அந்நிறுவனம்தான் பெற்றுள்ளது.
"புஷ்பா" படம் ஹிந்தியில் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதால் "அலா வைகுந்தபுரம்லோ" ஹிந்தி டப்பிங் படம் மூலமும் நல்ல வசூலைப் பெறலாம் என திட்டமிட்டிருந்தார்கள். தற்போது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது. சற்று முன் கோல்ட்மைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அலா வைகுந்தபுரம்லோ" ஹிந்தி டப்பிங்கின் தியேட்டர் வெளியீட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!