
சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு
மே 21, 2025
Advertisement
மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் இவரது ஆஸ்தான ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். சமீபத்தில் தான் இவர்களது கூட்டணியில் உருவான "பூத் பங்களா" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அந்த படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அக்ஷய் குமாரை வைத்து "ஹேரா பெரி 3" என்கிற படத்தை இயக்குகிறார் பிரியதர்ஷன். கடந்த 2000ல் வெளியான "ஹேரா பெரி" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2006ல் வெளியானது. தற்போது 19 வருட இடைவெளிக்கு பிறகு இதன் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது.
இந்த மூன்று பாகங்களையுமே பிரியதர்ஷன் தான் இயக்கி இருந்தார். மூன்றிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பாலிவுட் குணச்சித்திர நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த மூன்றாம் பாகத்தில் இருந்து தான் விலகுவதாக பரேஷ் ராவல் அறிவித்தார். இது படக்குழுவினரிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் இந்த படத்திலிருந்து விலகுவதற்கு சம்பள பிரச்னையோ அல்லது கதையில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துகளோ என எதுவும் காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொல்லப்போனால் அவர் தற்போது வாங்கும் சம்பளத்தை போல மும்மடங்கு இந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக பேசப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எதனால் அவர் விலகினார் என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அக்ஷய் குமார் இப்படி ஒப்பந்தத்தை மீறி நடிகர் பரேஷ் ராவல் திடீரென விலகியதால் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டு அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “பரேஷ் ராவல் இந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து என்னிடம் கூட முறையாக தெரிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் அக்ஷய் குமாரிடமாவது அவர் தெரிவித்து இருக்கலாம் அப்படி அவர் செய்யாததால் தான் அக்ஷய் குமார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இத்தனைக்கும் இந்தப்படம் துவங்கப்ப்படும்போதே பரேஷ் ராவல், சுனில் ஷெட்டி ஆகியோர் இருக்கிறார்களா என உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் என அக்ஷய் குமார் என்னிடம் கூறினார். அப்போதெல்லாம் பரேஷ் ராவல் படத்தில் இருந்து விலகும் எண்ணத்தில் இல்லை.” என்று கூறியுள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சமீபத்தில் இதே பிரியதர்ஷன், அக்ஷய் குமார், பரேஷ் ராவல் கூட்டணியில் தான் "பூத் பங்களா" படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அது குறித்து அக்ஷய் குமார் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!