தினமலர் விமர்சனம் » யமுனா
தினமலர் விமர்சனம்
கதாநாயக நடிகர்கள்தான் இயக்குநர் அவதாரம் எடுக்க வேண்டுமா என்ன...?! இதோ, கேரக்டர் ஆர்டிஸ்ட்டும் ‘நானும் இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்டேன்’ என களம் இறங்கி இருக்கிறார் இ.வி.கணேஷ்பாபு. பல படங்களில் நாயகரின் அன்பு நண்பன். நாயகியின் அண்ணன், தம்பி, காமெடியனின் கூட்டாளி, வில்லனின் வேலையாள் என ஏகப்பட்ட கேரக்டர்களில் இளம் குணச்சித்திர நடிகராக கொடிகட்டிப் பறந்த கணேஷ்பாபு, பாலு மகேந்திராவின் பயிற்சிப்பட்டறையில் இருந்து வெளிவந்த சத்யாவை கதாநாயகராக்கி கமலின் ‘சத்யா’ காலத்து படத்தை தந்திருக்கிறார்.
வழக்கமான கல்லூரி காதல் கதைதான். கதைப்படி கல்லூரியில் படிக்கும் ஸ்ரீரம்யா மீது காதல். அந்த காதலுக்காக உயிரை விடவும் துணியும் சத்யாவை ஸ்ரீரம்யாவும் காதலிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலர்கள் பிரிகின்றனர். சோகத்தில் இருக்கும் சத்யா, நண்பனுடன் சோகத்தை ஆற்றிக்கொள்ள ‘அந்த மாதிரி’ இடத்திற்கு போகிறார். அங்கு இவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது! யெஸ்., சத்யாவின் காதலி ஸ்ரீரம்யாதான் விபச்சார விடுதியில் சத்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அப்புறம்? அப்புறமென்ன?! காதலியின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? யார்? என கண்டுபிடித்து அவர்களை எதிர்க்க துணியும் சத்யா., ஸ்ரீரம்யாவை காப்பாற்றினாரா? கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை.
சத்யா, பாலு மகேந்திராவின் பயிற்சிபட்டறையில் இருந்து வெளிவந்திருக்கும் முதல் மாணவர் என்னும் வகையில் சோடை போகவில்லை. ஸ்ரீரம்யா அழகாக இருக்கிறார். அம்சமாக நடித்திருக்கிறார். அதுவும் சுடுகாட்டில் நடக்கும் அந்த படுக்கையறை காட்சியில் தேர்ந்த நடிகைகளையே பின்னுக்கு தள்ளிவிடும் பிரகாசம்! அம்மணி முன்னுக்கு வருவது நிச்சயம்!
வில்லியாக வந்து ஸ்ரீரம்யாவை விபச்சாரத்தில் தள்ளும் ‘எங்கேயும் எப்போதும்’ வினோதினி. மிரட்டல்! பாலாசிங், ‘பசங்க’ சிவக்குமார், செந்தி, சாம்ஸ் உள்ளிட்டவர்கள் பலம்! ‘ஆடுகளம்’ நரேன், மோகனப்பிரியா, இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு உள்ளிட்டவர்களும் ஆறுதல்!
வைரமுத்துவின் வைர வரிகள், இலக்கியனின் இனிய இசை, பி.லெனினின் கச்சிதமான படத்தொகுப்பு, பொ.சிதம்பரத்தின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்கள் இ.வி.கணேஷ்பாபுவின் எழுத்து, இயக்கத்திற்கு வலு சேர்த்திருக்கின்றது என்றாலும், 1980-90களில் வெளிவந்திருக்க வேண்டிய படமென்ற எண்ணத்தையும் ஏற்படுத்துவது பலவீனம்!
ஆதலால், ‘யமுனா’ - ‘ஜம்’முன்னா... என்று சொல்ல முடியவில்லை!
-----------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஒரு பாவப்பட்ட பெண்ணின் கதை!
சத்யாவும், ஸ்ரீரம்யாவும் கல்லூரிக் காதலர்கள். ஒரு நாள், பலான வீட்டுக்கு சத்யாவை அழைத்துச் செல்கிறான் நண்பன். அங்கே இருக்கும் விலைமகள் யார் தெரியுமா? காதலி ஸ்ரீரம்யாதான்! அவள் ஏன் அப்படி ஆனாள்? என்பதுதான் யமுனா!
முதல் பாதி முழுக்க காலேஜ் கலாட்டா. டி-ஆர். காலத்து எஃபெக்ட்!
சத்யா ஓகே. குரல்தான் கொஞ்சம் பிசிறடிக்கிறது. அனேகமாய் புரொடியூசரின் சொந்தக்காரராக இருக்க வேண்டும்.
பளிச்சென்று இருக்கிறார் ஸ்ரீரம்யா. பரிதாபக் காட்சிகளில் சுலபமாய் ஸ்கோர் செய்கிறார்.
எங்கேயும் எப்போதும் புகழ் வினோதினி ஆன்ட்டி செமை! அழகான ராட்சக்ஷி! ஹிஹி, நல்லா வருவீங்க ஆன்ட்டி!
வைரமுத்துவின் பாடல் வரிகளையெல்லாம் இசை ஆக்கிரமிப்பு செய்யாமல் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் இலக்கியன்.
க்ளைமாக்சில் அத்தனை பேரையும் பலி போட்டு, கதையை முடிக்கத் தெரியாமல் திணறியிருப்பது தெரிகிறது.
‘ஏ’ தனமாகக் காட்ட நிறைய வாய்ப்பு இருந்தும் ‘யு’ தனமாக படத்தை எடுத்திருப்பதற்காக இயக்குநர் கணேஷ்பாபுவைப் பாராட்டலாம்.
யமுனா - அவலை நினைத்து...!