Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மகிழ்ச்சி

மகிழ்ச்சி,
  • மகிழ்ச்சி
  • கவுதமன்
  • அஞ்சலி
  • இயக்குனர்: கவுதமன்
13 டிச, 2010 - 15:22 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மகிழ்ச்சி

    

தினமலர் விமர்சனம்

பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபனின் உயிரோட்டமான கதைதான் மகிழ்ச்சி என்ற பெயரில் சினிமா ஆகியிருக்கிறது. வ.கவுதமனின் திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பில் த.மணிவண்ணனின் தயாரிப்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் மகிழ்ச்சி திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம் பெறும் என்று உறுதி அளிக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்கா - தம்பி இடையே நெருக்கமான பாசத்தை அழகாக சித்தரித்திருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தின் இயற்கை எழிலும், அந்த மாவட்டத்திற்கே உரிய வட்டாரத் தமிழும், படம் முழுவதும் காணப்படும் ப்ளஸ். இரணியல் என்ற சிற்றூரில் படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அக்காக்கள், தங்கை, பெற்றோர், பாட்டி, மாமா என்று பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர் கதாநாயகன் வ.கவுதமன். படத்தின் இயக்குனரும் இவரே. பாத்திரத்தின் பெயர் திரவியம். எல்லோரும் அவரை திரவி என்று அழைக்கிறார்கள். அவரது முறைப்பெண் குழலி (அஞ்சலி). திரவியும், குழலியும் காதலிக்கிறார்கள். தன் அக்காவிற்கு திருமணம் ஆன பிறகே தனக்கு திருமணம் என்பதில் திரவி திடமாக இருக்கிறார். ஊரில் பெரிய பணக்காரரும், சொந்தத்தில் கடை நடத்துபவருமான செவத்த பெருமாளுக்கும் (நடிகர் சம்பத்), திரவியத்தின் அக்கா நாகம்மைக்கும் (நடிகை கார்த்திகா) திருமணம் நடக்கிறது. ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை புயலாகிறது. புகுந்த வீட்டில் கணவர், மாமியார் கொடுமை காரணமாக தற்கொலைக்கு முயலுகிறார். கோபமடைந்த கணவர் நாகம்மையை பிறந்த வீட்டுக்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பி விடுகிறார். தீராத நாகம்மை பிரச்னைக்காக காலவரம்பின்றி காத்திருக்க முடியாது என்று கூறி குழலியின் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி வேறு இடத்தில் திருமணம் செய்து விடுகின்றனர்.

பிள்ளை பெற்றுத்தரவில்லை என்று நாகம்மையை ஒதுக்கிய தன் அத்தானுடன் (அக்காவின் கணவர்), திரவி சமரசம் செய்யும் முயற்சிகள் தோற்கின்றன. தான் பரிபுரியும் அரசாங்க பள்ளியின் தலைமை ஆசிரியர் மோசஸ் (பிரகாஷ் ராஜ்) உதவியுடன் தன் அக்காவை மெடிக்கல் செக்-அப்பிற்கு அழைத்து செல்கிறார் திரவி. அதில் நாகம்மையிடம் எந்தற குறைபாடும் இல்லை; தாயாக எல்லா தகுதியும் இருக்கிறது என தெரியவருகிறது. குழந்தை பிறக்காததற்கு அக்காவின் கணவர்தான் காரணம் என அறியும் திரவி, அவரை எதிர்த்து கேட்கிறார். தன் இயலாமையால் வெறுப்படையும் சம்பத், பழிவாங்க முடிவு செய்கிறார்.

இதற்கிடையில் திரவியின் நீண்ட நாள் நண்பரும், எதற்கும் அவருக்கு தோள்கொடுக்கும் நண்பரான குற்றாலம் (சீமான்), திரவியின் அக்காவுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறார். நாகம்மையின் திருமணம் நடக்கக் கூடாது என்பதற்காக சம்பத், அவரை கடத்தி காட்டுப்பகுதியில் உயிரோடு புதைக்கிறார். சரியான நேரத்தில் தகவல் தெரிந்து, அங்கு வரும் திரவி, குற்றாலம் மற்றும் மோசஸ் ஆகியோர் நாகம்மையை காப்பாற்றுகிறார்கள். நாகம்மை - குற்றாலம் திருமணம் நடக்கிறது.

வ.கவுதமன், சீமான் இருவரும் பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கவுதமன் சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தை நினைவூட்டுகிறார். காதல் காட்சிகளிலும் ஓ.கே., சேலை கட்டிய எனத் தொடங்கும் பாடலுக்கு அஞ்சலி நிறைய கிளாமராக ஆடியிருக்கிறார். திரவியின் முதுகில் அஞ்சலி உப்புமூட்டை ஏறி ஓடையை கடக்கும்போதும், திரம்பி குடும்பத்தினரோடு உ‌ரிமையுடன் பழகும் காட்சிகளும் ரசிக்கக் கூடியவை. அக்காவாக வரும் கார்த்திகா, தம்பி மீது பாசத்தை ‌‌பொழிகிறார். எரியும் அடுப்பில் இருந்து தம்பிக்காக வெறும் கையால் வடையை எடுத்து விட்டு வலியால் துடிப்பதும், அக்காவின் வலி பொறுக்க முடியாமல் தம்பி துடிப்பதும் பாச வெளிப்பாடுகள். கார்த்திகாவின் தோற்றம் ஹீரோவின் அக்கா என்பதை ஒப்புக்கொள்ள நெருடலாக இருக்கிறது.

கஞ்சா கருப்பின் காமெடி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. பாட்டன் வி.எஸ்.ராகவனின் முதல் மனைவி, பாசமாக கஞ்சா கருப்பிற்கு விருந்து வைக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. தான் சாப்பிடுகிற இலையில் ஏற்கனவே மூன்று பேர் சாப்பிட்டது, அதை கழுவி, அதிலே தனக்கு விருந்து கொடுக்கிறார்கள் என்று அறிந்து கஞ்சா கருப்பு படும் அவஸ்தை செம காமெடி.

இந்த அளவுக்கு கொடுமைக்காரராக ஒருவர் இருக்க முடியுமா? என்று கேட்கும் அளவுக்கு சம்பத் நடித்திருக்கிறார். தன் தந்தையின் கெட்ட நடத்தை காரணமாக அவரை வெறுக்கும் சீமான், பின்னர் அவருக்கு வாத நோய் வரும்போது பாசத்தோடு பணிவிடை செய்யும்போதும், நண்பரின் பிரச்னையை தீர்க்க உதவும் போதும் சீமான் பண்பட்ட நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.

படத்தின் கடைசிக் காட்சியில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிறைய பரிசுகள் பெறும் பிரபாகரன் என்ற இளைஞர்,  எளிய குடும்பத்தில் பிறந்த தன்னை இந்த அளவுக்கு உயரச் செய்த தன் தாய்மாமன், தாய், தந்தையரை ‌விழா மேடைக்க அழைக்க அனுமதி கேட்கிறார். கவுதமன், சீமான், கார்த்திகா ஆகியோர் வயதானவர்களாக மேடையேறுகிறார்கள்.

ஜாதி, ஜாதி என்று எதற்கும் ஜாதியை பிரச்னை ஆக்காமல், ஜாதியை மறந்து எப்படி வாழ்வில் சாதிக்க முடியும் என்றே இளைஞர்கள் செயல்பட வேண்டும்  என்று சீமான் கேட்டுக் கொள்‌வதுவன் நச்சென்று படம் முடிகிறது.

சீரான கதையோட்டம் கொண்ட படத்தில் கூரப்பட்டு சேலைக்காரி என்ற கடைசி கடைசி பாட்டை குத்துப்பாட்டு குரூப் நடனம் ஏன்தான் சேர்த்தார்களோ? வித்யாசாகரின் இசை, செழியனின் ஒளிப்பதிவு, சூப்பர் சுப்பராயனின் சண்டை பயிற்சி ஆகியவை படத்திற்கு மெருகு ஊட்டுகின்றன.

- எஸ். ரஜத்


-------------------

குமுதம் விமர்சனம்


புகழ்பெற்ற நாவல்களை திரைப்படமாக்குவது தமிழில் அபூர்வம். சவாலானதும் கூட நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலுடன் இயக்குநர் வ.கௌதமன் துணிந்து சவாலில் இறங்கியிருக்கிறார். நாவலின் கதைக்களமான கன்னியாகுமரி கிராமங்களை கண் முன்னால் நிறுத்தியும் விடுகிறார். இவை மட்டுமே மகிழ்ச்சிக்கு போதும் என   கௌதமன் நினைத்துவிட்டது தான் தப்பு.

சாதிகளின் வறட்டுப்பெருமைக்குப் பின்னால் சமாதி கட்டப்பட்ட பண்களின் வாழ்க்கை தான் இருக்கிறது என்ற பிரம்படி பாடம்தான் மகிழ்ச்சி. முதல் முறையாக ஹீரோ  பொறுப்பையும் ஏற்றியிருக்கும் கௌதமன் சாதாரண பிரச்னைக்கு கூட கண்கள் மனிக்க. குரல் நடுங்க. பணிவு கொப்பளிக்க பேசுகிறார். யதார்த்தமாம் தமிழ் சினிமாவில் பலமுறை வந்து போன துறுதுறு முறைப்பெண் கேரக்டர் அஞ்சலிக்கு பழகிய பாதையில்  சைக்கிள் ஓட்டுவது போல அதை அஞ்சலி அலட்டாமல்  செய்திருந்தாலும் நமக்கு தான் அலுப்பு தட்டுகிறது.

கௌதமன் மேல் பாசத்தை கொட்டும் அக்காவாக கார்த்திகா சிளிபோல வளர்க்கப்பட்ட அவருக்கு பூனை மாதிரி வாய்த்த கணவனாக சம்பத் என சிலர் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மேல்சாதியை  சேர்ந்த கௌதமனுக்கும் தலித் தோழராக வரும் சீமானுக்குமான நட்பு, கிராமத்தில் சந்திக்கும் பிரச்னைகளில் உண்மை கன்னத்தில்  அறைகிறது. நிர்க்கதியாக நிற்கும் கார்த்திகாவுக்கும் சீமானுக்கும் விழுகிற திருமண முடிச்சை மேல்சாதியின் பெருந்தன்மையாக காட்டாமல்  யதார்த்தத்தின்  கட்டாமயமாக காட்டியிருப்பது, நாவலாசிரியரும், இயக்குநரும்  சேர்ந்து  ஜெயிக்கிற இடம்.

ஒரே ஊரில் இருந்தாலும் கௌதமன் வில்லனின் குணம் தெரியாமல் கார்த்திகாவை முதலில்  கட்டிக்கொடுப்பது எப்படி, கணவனின் கொடுமைகளை கார்த்திகா யாரிடமும் சொல்லாதது எப்படி. இப்படி படம் முழுவதும் நமக்கு பல எப்படி? நல்ல கதை என்றாலும் அதை சோர்வடைய  வைக்காமல் சொல்வதும் முக்கியம் இல்லையா?

வித்யாசாகரின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்கு முடிந்தவரை பலம் சேர்க்கிறது. எக்கச்சக்கமாய் படம் எடுத்து விட்டு அதிரடியாய்  குறைக்க சேர்ந்த சங்கடம் எடிட்டிங்கில் தெரிகிறது.

மொத்த கதைக்கே அடித்தளமாக இருக்கும் நட்டார் தெய்வ வரலாற்றை ஒரு படக்கதையாக  காட்டுவதில் இருக்கும் நறுக்கும் சுருக்கும் படம் முழுக்க இருந்திருக்க வேண்டாமா?

குமுதம் ரேட்டிங் - ஓ.கே.

---------------------

கல்கி விமர்சனம்

எத்தனை நாளாயிற்று இப்படி ஒரு படம் பார்த்து. அக்கா தம்பி பாசம்தான் கதை (நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவல்) தந்திருக்கிறார் இயக்குநர் வ.கௌதமன். வ.கௌதமன் - அஞ்சலி காதல் காட்சிகளின் போதெல்லாம், ஹே...இந்த மாதிரி காதலை நாம் ஊர்லேயும் பார்த்திருக்கிறோமே... என்று மனத்துக்குள் ஃப்ளாஷ்பேக் ஓடுகிறது. அதுதான் படத்துக்குப் பலமே! அக்காவாக கார்த்திகாவும், தம்பியாக கௌதமனும் நடித்திருக்கும் காட்சிகளிலெல்லாம் நமக்குள்ளும் நெகிழ்ச்சி ததும்புகிறது.

நாஞ்சில் நாட்டில் நடக்கும் கதை என்பதால் காட்சிக்குக் காட்சி செழியனின் கேமராவில் பசுமைன்னா அப்படியொரு பசுமை. கௌதமனின் அப்பா பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஊர்ப்பெரிசுகள் என... பாத்திரங்களின் தேர்வில் இயக்குனரின் ஆளுமை பளிச்சிடுகிறது. விற்பனைக்குப் போகும் வயலின் நாற்றைக் கட்டிப்பிடித்து அழுகின்ற காட்சி ஒன்றே போதும் மண்ணின் நேசத்தை உணர்த்த! கஞ்சாகருப்புவின் காமெடி, சீமானின் நடிப்பு... படத்துக்கு பக்கபலம். இசையும் (வித்யாசாகர்) திரைக்கதையும் கதம்பமாக மணக்கின்றன. ஆங்காங்கே தலை துõக்கியிருக்கும் வியாபாரத் தனங்களைக் கவனமாக ஒதுக்கியிருந்தால் மகிழ்ச்சி இன்னும் கூடுதலாகி இருக்கும்.

மகிழ்ச்சி - மண் வாசம்



வாசகர் கருத்து (22)

haris jayaraj - perambalur,இந்தியா
27 ஜன, 2011 - 19:03 Report Abuse
haris jayaraj படம் மிக மிக மிக நன்று.
Rate this:
manivel - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜன, 2011 - 13:15 Report Abuse
 manivel நல்ல படம் , திரைக்கதை மேலும் கவனம் தேவை.
Rate this:
ஜெயராஜ் வி.சி. - chennai,இந்தியா
15 டிச, 2010 - 12:23 Report Abuse
 ஜெயராஜ் வி.சி. அஞ்சலி நல்ல நடிகை. வீனாக்கிவிட்டார்கள் .குத்துப்பாட்டு தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
sundar - tamilnadu,இந்தியா
15 டிச, 2010 - 05:45 Report Abuse
 sundar பிலிம் nice
Rate this:
கே.சுரேஷ்குமார். - perambalur thirumandurai,இந்தியா
14 டிச, 2010 - 19:20 Report Abuse
 கே.சுரேஷ்குமார். நல்ல படம்
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மகிழ்ச்சி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in