தினமலர் விமர்சனம் » அருந்ததீ
தினமலர் விமர்சனம்
சமீபமாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் புனர் ஜென்ம கதையை உள்ளடக்கிய மற்றுமொரு திகில் படம்! எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் கதாநாயகி அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்து தெலுங்கில் சூப்பர்- டூப்பர் ஹிட் ஆன அருந்ததீ தமிழிலும் அதே பெயரில் ரீலிஸ் ஆகியுள்ளது.
கதைப்படி கந்தர்வகோட்டை சமஸ்தானத்தின் ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. வீரம், ஈரம் எல்லாவற்றிலும் சிறு வயது முதலே சிறந்து விளங்குகிறார். அவரிடம் அந்த சமஸ்தானத்தையே தன் தீய செயல்களால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அருந்ததியின் அக்காள் கணவர் பசுபதி வாலாட்டுகிறார். பசுபதியின் செயல்களால் கடும் கோபம் கொள்ளும் அருந்ததி, அவரது வாலை ஒட்ட நறுக்கி அடக்க, ஊரே தங்களது குலதெய்வம் ஜக்கம்மாவாக அருந்ததியை வணங்குகிறது. பசுபதியை தீர்த்துக் கட்ட அருந்ததீ தன் உயிரையும் துறக்கிறாள். அடுத்தடுத்த ஜென்மத்திலும் அருந்ததி அவதரிப்பாள் என்பதை உணர்ந்து எத்தனை ஜென்மமானாலும் அருந்ததியை தீர்த்துக் கட்ட காத்துக் கொண்டிருக்கிறான் அகோரியாகி பின் அருந்ததியால் உயிரோடு சமாதி வைக்கப்பட்டிருக்கும் பசுபதி! அருந்ததி அவன் எதிர்பார்த்த மாதிரியே அதே குடும்பத்தின் மூன்றாவது ஜென்மத்தில் மீண்டும் பிறக்கிறாள். அருந்ததியை கந்தர்வகோட்டைக்கு வரவழைத்து பழிவாங்க துடிக்கிறான் பசுபதி. அருந்ததி வென்றாளா? அமானுஷ்ய சக்தி கொண்ட பசுபதியை கொன்றாளா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்பும் மிக்க மீதி கதை!
அனுஷ்கா முதல் ஜென்மத்து அருந்ததியாகவும், மூன்றாம் ஜென்மத்து அருந்ததியாகவும் இரட்டை வேட நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இப்படி, நன்றாக நடிக்க தெரிந்த இவரை கூடிய விரைவில் நம்மவர்கள் வேட்டைக்காரன், சிங்கம், சிறுத்தை என கவர்ச்சி வளையத்துக்குள் கட்டிப் போட இருப்பதை எண்ணி, இப்பொழுதே வருத்தம் மேலோங்குகிறது நமக்கு!! பசுபதியாக வில்லன் நடிகர் சோனுஷூட் பிரமாதமாக பொறுந்தி நடித்திருக்கிறார். ஜெயம் படத்திற்கு பின் இவரது பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது அருந்ததீ. பொம்மாயி, பொம்மாயி என அவரது கொஞ்சலும், கெஞ்சலும் நம்மை குல நடுங்கச் செய்து விடுகிறது என்றால் மிகையல்ல!
இந்த இருவரைப் போன்றே மூன்றாம் ஜென்ம அருந்ததிக்கு உதவி செய்யும் மந்திரவாதி சாயாஜி ஷிண்டே, மனோரமா, சுகாஷினி, மாஜி கவர்ச்சி நடிகை ஜெயலலிதா மற்றும் அருந்ததியின் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, சித்தப்பா - சித்தி, அண்ணன் - தம்பி, மாமா - அத்தை என தெலுங்கு நடிகர்கள் அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். இவர்கள் எல்லோரையும் விட படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் கந்தர்வகோட்டை அரண்மனை செட், பாழடைந்த நிலையிலும், புத்தம் புதிதாக ஜொலித்த நிலையிலும் பிரமாதம்.
பேஷ், பேஷ்... பி.ரவிசங்கரின் வசனம், வாலியின் பாடல்கள், கோட்டியின் இசை, கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, அசோக் குமாரின் கலை, ராகுல் நம்பியாரின் விஷூவல் எபெக்ட் இவை எல்லாவற்றையும் பக்க பலமாக கொண்டு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. சபாஷ்..!
வில்லன் அகோரி ஆவது மட்டும் நான் கடவுள் ஆர்யாவை ஞாபகப்படுத்தினாலும் அருந்ததீ - ரசிகர்களுக்கு திகில் தீ! தயாரிப்பாளர் ராம நாராயணனுக்கு வசூல் தீ!
-----------------------------------
குமுதம் விமர்சனம்
ஆவி, பிரேத ஆத்மா, சமாதி, ஜக்கம்மா என பெரிதாக வட்டம் போட்டு அதற்கு நடுவே "அருந்ததீ'யை நிறுத்தியிருக்கிறார்கள்.
மனோரமா தவிர மற்ற அத்தனை கேரக்டர்களும் தெலுங்கு முகங்கள். தமிழ் டப்பிங் தத்தித் தத்தி நொண்டியடிப்பது பேரவஸ்தை. ஆனால் இதையெல்லாம் மறக்கச் செய்வது திரைக்கதையின் வேகம்தான்.
வாடா... வந்து சமாதியை உடை என்ற ஆவியின் அலறலும் கண்களை மிரள வைக்கும் கந்தர்வக்கோட்டை காட்சிகளும் செம திகில்.
"கண்களில் திமிர் தேக்கி வட்டமாய் நெற்றிக் குங்குமம், ரெட்டை மூக்குத்தி என அருந்ததி அனுஷ்கா தூள் மாமே தூள். அக்காவின் தற்கொலை ஆசிரியை கற்பழிப்பை சகிக்க முடியாமல் குதிரைக் காலில் கட்டி வில்லனை இழுத்துச் செல்லச் செய்வது மகா கம்பீரம்.
ஆவியான சோனு, மறு ஜென்மம் எடுத்து வந்த அனுஷ்காவை காமப்பசியோடு அனுபவிக்கத் துடிக்கும் காட்சிகள் ஜிவ்.
மண்டையில் ரத்தம் சொட்ட தேங்காய் உடைப்பது, ரத்தம் ஒழுகிய நிலையில் ஒரு பெண்ணை வில்லன் பலாத்காரம் செய்யும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
அருந்ததீ - வித்தை தெரிந்தவள். குமுதம் ரேட்டிங் - ஓ.கே