தினமலர் விமர்சனம்
கீழ் வீட்டிற்கு குடிவரும் சிம்புவிற்கும் மேல் வீட்டில் குடியிருக்கும் அந்த வீட்டு உரிமையாளரின் மகள் த்ரிஷாவிற்கும் இடையில் ஒர்க்-அவுட் ஆகும் கெமிஸ்ட்ரி, ஹிஸ்ட்ரி, ஜாகரபி, மேத்தமடிஸ், இத்யாதி... இத்யாதிகளும் அவர்கள் காதலுக்கு கிளம்பும் எதிர்ப்புகளும்தான் விண்ணைத்தாண்டி வருவாயா மொத்த படமும்.
அதுவும், சினிமா என்றாலே வெறுக்கும் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து சிம்புவை விட ஒரு வயது மூத்த த்ரிஷாவை, சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து, வாங்கிய என்ஜினீயர் பட்டத்தை தூர தூக்கி வைத்து விட்டு போராடும் இந்து குடும்பத்தை சார்ந்த சிம்புவிற்கு கொடுக்க யார்தான் சம்மதிப்பார்கள்? சிம்பு - த்ரிஷா காதல் வெற்றி பெற்றதா? சிம்புவின் சினிமா இயக்குனர் லட்சியம் நிறைவடைந்ததா? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாக விடை சொல்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா படம்!
சிம்பு, வழக்கமான அதிரடி சிம்புவாக அலம்பல் பண்ணாமல் அழகாக அடக்கி வாசித்து அசத்தி இருக்கிறார். மீசை இல்லாமல் இந்தி நடிகர்கள் மாதிரி நச் லுக்குடன் த்ரிஷாவை மட்டுமல்ல... நம்மையும் டச் செய்து விடும் சிம்பு, காதலுக்காகவும், சினிமா வாழ்க்கைக்காகவும் நிறையவே போராடி முன்னதில் தோற்பதும், பின்னதில் ஜெயிப்பதும் படத்திற்கு கூடுதல் பலம்!
த்ரிஷா, சிம்புவிற்கு அக்கா மாதிரி தெரிந்தாலும் வழக்கம்போலவே அழகாக பளீச் என்று இருக்கிறார். அவரை விட இவர் ஒரு வயது மூத்தவர் என கதையில் சொல்லப்படுவது ஆறுதல். சிம்புவைக் காட்டிலும் படத்தில் சம்மந்தப்பட்ட பாத்திரமாகவே த்ரிஷா வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல! பேஷ்..! பேஷ்..!! அதற்காக இன்டர்வெல்லுக்கு அப்புறம்., ஐ லவ் யூ., ஐ ஹேட் யூ என சிம்புவிற்கு மெசேஜ் அனுப்புவது போரடிக்கிறது.
சிம்புவின் அப்பாவாக கிட்டி, த்ரிஷாவின் அப்பாவாக பாபு ஆண்டனி, அண்ணன் சத்யா, த்ரிஷா அலெக்ஸ், சுப்புலட்சுமி கவுரவ வேடத்தில் சிம்பு இயக்கும் பட நட்சத்திரங்களாக வரும் நாகசைதன்யா, சமந்தா சிம்புவின் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட எல்லோரையும் ஓவர் டேக் செய்து விடுகிறார் சிம்புவிற்கு உதவி செய்யும் ஒளிப்பதிவாளராக கரகரகுரலில் மெட்ராஸ் பாஷை பேசி படம் முழுக்க கலக்கும் கணேஷ். சிம்புவின் காதலுக்காக அவருடன் கேரள போகும் இவர்., டேய் வாடா தம்பி... ஓடிப் போயிடலாம் என்றும் மலை மலையா ஆட்கள் வந்து பொளந்து கட்டிடுவாங்க போயிடலாம் வாடா என்றும் இவர் சிம்புவை பயமுறுத்தும் இடங்கள் தியேட்டரை கைத்தட்டல் - விசில் சப்தத்தில் கதிகலங்க வைக்கறது. சபாஷ்!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஓமண பெண்ணே, மன்னிப்பாயோ உள்ளிட்ட ஏழு பாடல்களும் இதம். மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஓவியமாக்கியுள்ளதென்றால் மிகையல்ல.
முன்பாதியில் உள்ள விறுவிறுப்பு, பின்பாதியில் காணாமல் போக காரணம் எடிட்டர் ஆண்டனி காரணமா? இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் காரணமா? எனக் கேட்டு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்!
மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இளைஞர்கள் எல்லோரும் ஒருமுறை வீட்டைத்தாண்டி போய் பார்க்கலாம்!.
---------------------------
குமுதம் விமர்சனம்
ஆ... இந்தக் காதல் இருக்கே அது என்னைப் போட்டுத் தாக்கிடுச்சு, பொரட்டி அடிச்சுடுச்சு' சிம்பு...!
இல்ல.. நான் காதலிக்கலை... ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம்...' வேணாம்.. காதலிப்போம்' "ஆங்... வந்து... ஐயோ... என்னை விட்ரு' த்ரிஷா...!!
விண்ணைத்தாண்டி வருவாயான்னு சிம்பு ஏங்குவதும், என்னால வீட்டை தாண்டிகூட வரமுடியலையே... என த்ரிஷா அல்லாடுவதுமாக காதல் படுத்தும் பாடுதான் கதை.
வழிய வழிய காதலிப்பதும், பிழிய பிழிய ரொமான்ஸ் செய்வதுமாக அடக்கமான பையனாக சிம்பு. விரல்வித்தைக்காட்டாமல் மிக அழகாகச் செய்திருக்கிறார். ஆசாரமான கிறிஸ்துவப் பெண்ணாக த்ரிஷா. அசட்டுப் பெண்ணா, காரியவாதியா எதுவும் புரியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்கு அடங்கின பெண் போலத்தோன்றினாலும், பல காட்சிகளில் உன்னை மாதிரி நிறையப் பசங்களைப் பார்த்திருக்கேன்டா என்கிற மாதிரி செம அசால்ட்டாக சிம்புவிற்கு அட்வைஸ் பண்ணுகிறார்.
நீ என்னை ஃபாலோ பண்ணலே இல்லை..' என சிம்புவிடம் த்ரிஷா கேட்பது வெகு அழகு. உம் பின்னால எவனுமே சுத்தலையா...? என்ற சிம்புவின் கேள்விக்கு, உன் கண்களால் வேறு எவனுமே பார்க்கலையோ, என்னமோ என்பது போன்ற வசனங்கள் பளிச்.
ரயிலில் த்ரிஷாவின் கிறிஸ்துவ ஆசாரத்தை உடைத்து சிம்பு முத்தமிடுவதும், எதிர்க்க முடியாமல் த்ரிஷா அதை அனுபவிப்பதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். இப்படி ஸ்கிரீன் முழுக்க சிம்பு த்ரிஷா ஜோடியே வியாபித்திருக்கிறது.
இது தவிர, மிக டீசன்டாக காதலை காட்டுறேன் என படம் நெடுக வசனங்கள்... வசனங்கள்... என்னை விட்ரு... எங்க வீட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க என்கிறார் த்ரிஷா. இன்னொரு சீனில் நான் ஓடி வந்துடறேன்... என்று சிம்புவிடம் விசும்புகிறார். திடீரென எல்லாம் முடிஞ்சுடுச்சு.. இப்போ நான் மாறிட்டேன்னு மெச்சூரிட்டியாக பேசுகிறார். உண்மையில் இந்தப் பொண்ணுக்கு காதல் இருக்கா, இல்ல டீலில் அலையவிட்டு வேடிக்கை பார்க்குதா? செமத்தியா குழப்பிட்டாங்க.
த்ரிஷா கலாச்சாரமான குடும்பப் பெண். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என வைத்துக் கொண்டாலும் சர்ச்சில் கல்யாணம் நடக்க இருக்கையில் எனக்குப் பிடிக்கலை என எப்படி அத்துமீறல் செய்ய முடிந்தது என்பது விடை தெரியாத கேள்வி.
காதலிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு சாதி, மதம் குடும்ப கவுரவம் என ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவளால் அதையெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டு வரமுடியாது. அவள் குழப்பமான பெண்ணாகத்தான் இருப்பாள் என டைரக்டர் என்னதான் சப்பைக் கட்டு கட்டினாலும், சிம்புவை பரிதவிக்க விட்டுவிட்டு த்ரிஷா அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படும்போது பரிதாபம் வருவதென்னவோ சிம்பு கேரக்டர் மீதுதான். த்ரிஷா மீதல்ல.
மனோஜ் பரஹம்ஸாவின் ஒளிப்பதிவு மிக அழகாக இருக்கிறது. வரவேற்கப்பட வேண்டியவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஹோசன்னா பாடல் மனசுக்கு இதம். பின்னணி இசை காட்சிக்கு பொருத்தம்.
விண்ணைத் தாண்டி வருவாயா? - இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் படத்தில் இல்லை.
குமுதம் ரேட்டிங்: ஓ.கே.