வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
2015ம் ஆண்டின் ஜுலை மாதம் முடிவடைந்த நிலையில் சுமார் 123 படங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் வெளிவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெறுகின்றன.
விமர்சன ரீதியாக பாராட்டப்படும் படங்கள் வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் எந்த விதமான லாபத்தையும் கொடுப்பதில்லை என்ற குறையும் இருக்கிறது.
ஜுலை மாதத்தின் கடைசி நாளான 31ம் தேதியன்று வெளியான நான்கு படங்களில் விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படம் பல ஊர்களில் முதல் காட்சிக்குப் பிறகு ரசிகர்கள் யாரும் வராத நிலையே ஏற்பட்டுள்ளது.
நேற்றோடு பல ஊர்களில் படத்தைத் தூக்கி விட்டதாகவும் கூட தகவல்கள் வருகின்றன. தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொண்ட விஜய் சேதுபதிக்கு, அவர் கடைசியாக நடித்y சில படங்கள் பெயரையும் தரவில்லை, வெற்றியையும் தரவில்லை என்பதே உண்மை. விஜய் சேதுபதி சீக்கிரம் உஷாரானால் உண்டு.
மற்ற படங்களில் சகலகலா வல்லவன் படம் மட்டுமே ஓரளவிற்குத் தாக்குப் பிடிக்கும் என்கிறார்கள். இது என்ன மாயம் படத்தில் நல்ல கதையைத் தேர்வு செய்த இயக்குனர் அதை சொல்லத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார். 2010ம் ஆண்டு வெளிவந்த சிரானோ ஏஜென்சி என்ற கொரியப் படத்தின் காப்பிதான் இந்தப் படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்பி அடிப்பதை விஜய் எப்போதுதான் நிறுத்துவாரோ தெரியவில்லை.
24ம் தேதி வெளியான ஆவி குமார் படம், விஸ்மயதும்பத்து என்ற மலையாளப் படத்தின் காப்பியாக இருந்தது. அதே தினத்தில் வெளியான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படமும், தி உல்ஃப் ரிட்டர்ன்ஸ் என்ற கொரியன் படத்தின் காப்பி என்றும், ஒய்ஜி மகேந்திரன் நடித்த நாடகத்தின் காப்பி என்றும், ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் வலைத்தளவாதிகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
17ம் தேதி தனியாளாக வெளிவந்த மாரி படமும் தனுஷே இதற்கு முன் நடித்த புதுப்பேட்டை, ஆடுகளம் படங்களின் கலவைதான். படம் வெளிவந்த அன்றே அனேகன் படத்திற்கு சொன்னது போலவே படம் சூப்பர் ஹிட் என்று அவர்களாகவே சொல்லிக் கொண்டார்கள். 50 கோடி வசூல் என்றெல்லாம் அள்ளி விட்டார்கள். யார் வந்து அவர்கள் வசூல் அட்டவணையைப் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியம்தான் அதற்குக் காரணம்.
10ம் தேதி வெளியான படங்களில் பாகுபலி படம் மட்டுமே பல்வேறு விதமான சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் படமாக இருக்கிறது. தமிழில் நேரடியாக எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் படம் 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி படம் வெற்றிகரமாக வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இப்போதே காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவிற்கு படம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆனாலும், எம்ஜிஆர் நடித்து வெளிவந்த அடிமைப் பெண் படத்தின் சாயல் இந்தப் படத்தில் நிறையவே உள்ளதாக தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
3ம் தேதி வெளியான படங்களில் பாபநாசம் படத்தைத் தவிர மற்ற அனைத்துப் படங்களுமே கவனிக்கக் கூடப் படாமல் போய்விட்டன. மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக வெளிவந்த பாபநாசம் படம் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும்படியான படமாக அமைந்து வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. உத்தம வில்லன் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் நஷ்டத்தை உருவாக்கிய கமல்ஹாசனுக்கு பாபநாசம் படம் அவருடைய மார்க்கெட்டையும் மீட்டுக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. எந்த மாதிரி படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இனியாவது பரிசோதனை முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபடாமல் இருந்தால் புதிய தயாரிப்பாளர்களும் அவரைத் தேடிச் செல்வார்கள்.
ஆக, ஜுலை மாதத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்று காப்பியடிக்கப்பட்ட படங்களாக இருந்துள்ளன. இல்லையென்றால், வேற்று மொழியிலிருந்து தழுவப்பட்ட படங்களாகவும், தமிழிலிருந்தே தழுவப்பட்ட படங்களாகவுமே இருந்துள்ளன.
தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் யாரும் இல்லாத குறையே இந்த கதை வறட்சி உருவாகக் காரணமாக இருந்துள்ளது. அந்தக் காலத்தில் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் கதை இலாகா என்ற பெயரில் ஒரு குழுவே படங்களின் கதைகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும்.
இப்போது வரும் படங்களில் வரும் காமெடிக் காட்சிகளை உருவாக்க சந்தானம், வடிவேலு போன்ற நடிகர்கள் காமெடிக் குழுக்களை வைத்திருப்பதைப் போல, இயக்குனர்களும் கதை இலாகா ஒன்றை அமைத்தால்தான் இந்த கதைப் பஞ்சம் போகும்.
அல்லது அடுத்தவர் கதையை வாங்கி இயக்கும் பக்குவத்தையாவது இயக்குனர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது திரையுலகத்திற்கும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜுலை மாதம் வெளிவந்த திரைப்படங்கள்...
ஜுலை 3
சாம்பவி
பேபி
ஒரு தோழன் ஒரு தோழி
பரஞ்சோதி
பாலக்காட்டு மாதவன்
பாபநாசம்
ஜுலை 10
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
மகாராணி கோட்டை
ஒரே ஒரு ராஜா மொக்கராஜா
பாகுபலி
ஜுலை 17
மாரி
ஜுலை 24
ஆவி குமார்
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
குரு சுக்ரன்
ஜுலை 31
நிராயுதம்
இது என்ன மாயம்
ஆரஞ்சு மிட்டாய்
சகலகலா வல்லவன்