Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2 வருமா?; சிவகார்த்திகேயன் பளீச் பதில்

10 அக், 2021 - 10:43 IST
எழுத்தின் அளவு:
sivakarthikeyan-opens-about-VVS-part-2

கொரோனா தாக்கத்திற்கு பின், திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க பெரும் முயற்சியாக திரைத் துறையினர் கருதும், டாக்டர் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், நம் தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


டாக்டர் படத்தின் சிறப்பு என்ன?


இதுவரை பார்த்த படபடவென பேசுபவனாக அல்லாமல், இப்படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்ப்பீர். என் கேரக்டரை இயக்குனர் நெல்சன் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார். நானே என்னை கட்டுப்படுத்தினாலும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பேன். அது இப்படத்தில் இல்லை.


இயக்குனரை பற்றி?


இருவருக்குமே ஒன்றாக சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. காந்தி சிலை பின்னால், கடற்கரையில், அவர் கதை சொல்ல, நான் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பேன். ‛வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்கிய போது, நான் அதில் உதவி இயக்குனராகவும்; நடிக்கவும் செய்தேன். ஆனால் அப்படம் வெளியாகவில்லை. எங்களின் நட்பு மட்டும் தொடர்ந்து. கோலமாவு கோகிலா படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த கனவு நிறைவேறியுள்ளது.


டாக்டர் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாக தெரிகிறதே?


நான் நடித்த படத்திலேயே ‛டாக்டர் படத்திற்கு தான் யு/ஏ சான்றிதழ். கதை அந்த மாதிரி. ஆனாலும் குடும்பத்துடன் படத்தை சிரித்துக் கொண்டே பார்க்கலாம். ராணுவ மருத்துவராக நடித்துள்ளேன்.


அயலான் படம் பற்றி?


அயலான் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு. நான் நடித்த படத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகிறது. அந்த மாதிரி கதைக்களம் இதில் உள்ளது.




தயாரிப்பாளர் ஆனதற்கு வருத்தப்பட்டது உண்டா?


தயாரிப்பாளர் ஆனதற்கு வருத்தப்படவில்லை. தெரிந்து எடுத்து முடிவு தான். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் நான்கு படம் நடிப்பதாக வெளியான தகவல் பொய்.


நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியரை தாண்டி இயக்குனராகும் எண்ணம் உண்டா?


இயக்குனர் ஆகும் ஆசை இருந்தது. ஆனால் வேலையின் பளுவை பார்த்தபின் பயம் வந்து விட்டது. அதற்கு இன்னும் தயாராக வேண்டும். நான் எழுதி வைத்திருந்த கதை இப்போதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆசை இருக்கு எதிர்காலத்தில் பார்க்கலாம்.


இடையில் அதிக இடைவெளி ஏன்?


நானா இடைவெளி விட்டேன். சைனாக்காரன் விட்ட இடைவெளி இது. ஆகஸ்ட் 2020ல் டாக்டர் படம் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக தாமதம் ஆனது. அடுத்த நான்கு மாதத்தில் டான், அயலான் படங்கள் வெளியாகும்.


பாடல் ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கலாமா?


ஒரு ஜாலிக்காக தான் பாடல் எழுதினேன். இவன் என்ன எழுதியிருப்பான் என மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று தான் சும்மா எழுதினேன். நெல்சன் தான் கோலமாவு கோகிலா படத்தில் இதை ஆரம்பித்து வைத்தார்.


விலங்குகளை தத்தெடுத்தது குறித்து?


விலங்குகள் இருந்தால் தான் மனிதர்கள் வாழ முடியும். காடு உருவாக யானை மிகவும் முக்கியம். வெள்ளைப்புலி அழிவதாக சொன்னார்கள். எனக்கு விலங்குகள் மிகவும் பிடிக்கும். என் தாய், விலங்குகளின் பெயரை வைத்தே தாலாட்டு பாடுவார். இப்போது நானும் யானை வளர்க்கிறேன் என சொல்வதற்கு சந்தோஷமாக இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு விலங்குகளை பற்றி சொல்ல கொஞ்சமாவது இருக்க வேண்டும்


கொரோனா காலத்தில் நீங்கள் கற்றது என்ன?


அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது? என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்க்கை முறை எவ்வளவு மாறியுள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். சின்ன வயதில் வாரத்திற்கு ஒரு முறை தான் அசைவ உணவு இருக்கும். அதன் பின் தினமும் அசைவம் என்றாகிவிட்டது. கொரோனாவால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. என்ன தேவை; தேவையில்லை என்பதையும், குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்கவும் சொல்லி கொடுத்துள்ளது. இதுவரை தெரிந்ததே வேறு. வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு வேலை செய்கின்றனர் என்பது தெரிந்தது. நானும் பாத்திரம், கழுவவும், வீட்டை துடைத்து சுத்தப்படுத்தவும் கற்றுக் கொண்டேன். ரொம்ப சிரமமாக இருந்தது.


தனிப்பட்ட இழப்புகளும் இருந்தது. அப்போது தான் உடன் இருந்தவர்களை பாராட்டுவதை காட்டிலும் கொண்டாட வேண்டும் என்பதும் தெரிந்தது. சின்ன பிளஸ் இருந்தால் கூட, அதை அவர்களுடன் பகிர்ந்து, கொண்டாட வேண்டும். அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனாவால் இறந்தது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. எந்த பாரபட்சமும் இன்றி உபசரிப்பார். அவரை கொண்டாடாமல் விட்டு விட்டோம். அவர் சொல்லிக் கொடுத்தது நிறைய செய்ய வேண்டும். குறிப்பாக அவசியமின்றி கூடுதலாக இருந்த ஒரு காரை விற்று விட்டேன்.


நீங்கள் நடித்த படத்திலேயே பிடித்தது?


எதிர்நீச்சல், ரெமோ பிடித்தது. நிறைய நிறை, குறைகளை அலச முடிந்தது.


நடித்த படங்களிலேயே இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் ஏதாவது?


‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடாது என நான் தான் ஒற்றைக்காலில் நிற்கிறேன். அது ஒரு ‛எபிக் படம். அதை தொடவே கூடாது. எங்களையே அறியாமல் அனைவரும் சேர்ந்து வாழ்ந்த படம் அது. ரெமோ கதையை காட்டிலும், அந்த நர்ஸ் பாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கலாம்.


ரீமேக் திட்டம் ஏதாவது?


அந்த மாதிரி தவறையெல்லாம் செய்ய நினைக்கவில்லை. ரீமேக் செய்வது ஈசியாக இருக்கும். வியாபாரமும் ஆகும். ஆனால் பெரிய அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். ‛புட்டபொம்மா பாடல் போல் நாம் ஆட முடியுமா!


தந்தையாக உங்கள் பணி எப்படி?


இரண்டு குழந்தைகளையும் மனைவி தான் சிரமப்பட்டு கவனிக்கிறார். மகனுக்கு டயப்பர் மாற்றுவது மட்டுமே அவ்வப்போது என் பணியாக உள்ளது. என் மூத்த மகள் ஆராதனா, தம்பி குகன்தாஸை நன்றாக கவனிக்கிறார். மகன் பிறப்பதற்கு முன்பே ஆராதனாவை மனரீதியாக தயார்படுத்தி விட்டோம்.


நண்பரான நெல்சன் உங்களை இயக்க தாமதம் ஏன்?


முன்பு பெரிய பட்ஜெட் கதை கூறினார். சின்னப் படம் பண்ணிட்டு திரும்ப பண்ணலாம்னு சொன்னேன். பின் ‛கோலமாவு கோகிலா பண்ணினார். முதலில் ‛டாக்டர் முடிக்கலாம் பிறகு பெரிய படம் என பேசி முடித்தோம். நாங்க நண்பர்கள் எப்பவும் சேர்ந்து வேலை பார்க்கலாம்.


ஓ.டி.டி.,யில் படங்கள் ரிலீஸ் எப்படி பார்க்குறிங்க?


கொரோனாவுக்கு பின் சினிமாவில் பல மாற்றம் வந்துள்ளது. எல்லா படங்களையும் ஓ.டி.டி.,யில் ரிலீஸ் செய்வதில்லை. தியேட்டரில் எல்லா படங்களையும் ரிலீஸ் செய்யலாம். தியேட்டர், ஓ.டி.டி., இரண்டும் தேவை.


ரீ என்ட்ரி கொடுக்கும் வடிவேலு உடன் நீங்கள்?


நடிக்கிறார் என்ற செய்தி பார்த்து அவருக்கு போனில் வாழ்த்து சொன்னேன். ‛கண்டிப்பா நம்ம சேர்ந்து பண்ணலாம் செல்லம்னு கூறினார். ரெண்டு பேருக்கும் ஏற்ற ஒரு கதைக்காக வெயிட் பண்றேன்.


சில நடிகர்கள் சொந்த படம் தயாரித்து கடனில்...?


என்னை கூட கடன் பிரச்னையால் தொடர்ந்து 4 படங்கள் பண்றேன்னு சிலர் கூறியதில் உண்மையில்லை. பல படம் தயாரித்து வெளியிட சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ ரைட்ஸ் சரியாக இருந்தாலே 60 சதவீதம் பணம் எடுக்கலாம். பின் குறைந்த ரிஸ்க்கில் தியேட்டருக்கு வரலாம். சரியான ஆட்கள் பிடித்தால் லாபம் பார்க்கலாம்.


அடுத்து உங்கள் நடிப்பில் ரிலீஸாகும் படங்கள்?


‛டான். அடுத்து பெரிய பட்ஜெட்டில் ஹிந்தி உட்பட பல மொழிகளில் ரஹ்மான் இசையில் ‛அயலான் ரிலீஸாகிறது. சில படங்கள் பேசிக் கொண்டு இருக்கிறேன்.


-நமது நிருபர்-


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛பொன்னியின் செல்வி ஐஸ்வர்யா லட்சுமி‛பொன்னியின் செல்வி ஐஸ்வர்யா லட்சுமி உங்கள் வீட்டு பிள்ளையாகணும் : ஹரீஷ் கல்யாண் உங்கள் வீட்டு பிள்ளையாகணும் : ஹரீஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)