
3ம் அலைக்கு முன் தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நடக்குமா ?
தமிழ் டிவிக்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான "பிக் பாஸ்" நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்களிலும் ஜுன் மாதங்களில்தான் ஆரம்பமானது. ஆனால், கடந்த வருடம் கொரோனா பாதிப்பால் அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கல் சமயத்தில் முடித்தார்கள்.
இப்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறையும் சூழலில் இந்த மாதக் கடைசிக்குள் முழுவதுமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனை ஜுலை மாதத்தில் ஆரம்பித்து அக்டோபர் மாதத்திற்குள் முடிப்பது சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தை பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் யோசித்துவிட்டது போலவும் தெரிகிறது.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5க்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன என்று தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வருடம் தெலுங்கு பிக் பாஸ் ஆரம்பமான பிறகுதான் தமிழ் பிக் பாஸை ஆரம்பித்தார்கள். எனவே, தமிழிலும் ஆரம்பக் கட்டப் பணிகள் ஆரம்பமாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கலாம். நிகழ்ச்சிக்கான பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் போட்டுக் கொள்ள வைத்தும் நிகழ்ச்சியை நடத்தலாம்.
சென்னை, பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான நிரந்தர அரங்கு உள்ளது. அதில்தான் இந்த வருடத்திற்கான மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால், ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்பும் நிகழ்ச்சியை நடத்தியதை அடுத்து அந்த அரங்கிற்கு கடந்த மாதம் "சீல்" வைத்தார்கள். அந்த சிக்கலைத் தீர்த்த பிறகுதான் இந்த வருட தமிழ் பிக் பாஸ் சீசன் 5க்கான அரங்கம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க முடியும்.
இந்த வருட 5வது சீசனுக்காக கமல்ஹாசன் கூட மார்ச் மாதத்திலேயே அட்வான்ஸ் வாங்கி அதை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்றும் சொன்னார்கள். எனவே, அரங்கத்திற்கான "சீல்" சிக்கல்களை எல்லாம் முடித்து விரைவில் அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!