விமர்சனம்
கதைப்படி, மிலிட்டரிக்காரரான அப்பாவுக்கும், டீச்சர் அம்மாவுக்கும் பிறந்த மகன்தான் ஹீரோ ஹரீஸ் கல்யாண். அவர் வளர்ந்து பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது பார்டரில் நடந்த ஒரு சண்டையில் குண்டடி படுகிறார் அப்பா. இனி, ராணுவத்தில் செயல்பட முடியாது எனும் நிலையில் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு மனைவி மகனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிலிட்டரிக்காரர் ஊருக்கு வருகிறார. வந்த சில நாட்களிலேயே டீச்சர் மனைவி பாம்பு கடித்து இறந்து போக., மனைவியை இழந்த கணவரும், அம்மாவை இழந்த மகனும், ஆக்கிப்போட ஆளில்லாமல் அல்லாடுகறிார்கள். அப்புறம்? அப்புறமென்ன...? அதையே காசாக்கி மகனுடன் ப்ளஸ்-டூ படித்து முடிக்கும் மாணவியை மருமகளாக்கிக் கொள்கிறார் மிலிட்டரி. இதற்கு அப்புறம்தான் கதையே!
அதாகப்பட்டது.., பள்ளி இறுதி ஆண்டில் ஸ்கூல் பர்ஸ்ட் வரும் மகனை அவனது அம்மா மாதிரி டீச்சர் ஆக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக டீச்சர் டிரைனிங் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் மிலிட்டரி, மருமகளை மருமகளாக நடத்தாமல் மனைவி ஆக்கிக் கொள்வதுதான் சிந்து சமவெளி படத்தின் திடுக்கிடும் மீதிக்கதை!
அன்பழகனாக புதுமுகம் ஹரீஸ் கல்யாண் நல்ல நடிப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக திகழ்கிறார். தமிழ் சினிமாவிற்கு நடிக்கத் தெரிந்த அழகான இளம் ஹீரோ ரெடி! சுந்தரியாக அமலாபால் அலைஸ் அமலா செம கச்சிதம். முதல் படமான வீரசேகரன் படத்தில் நடித்ததை விட எக்கச்சக்க ஸ்கோர் செய்திருக்கிறார். காதலித்து கல்யாணம் செய்து கொண்ட அன்பழகனுக்கு எதிர்பாரதவிதமாக இவர் செய்யும் துரோகம், அனகா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தாமல் அனுதாபத்தை ஏற்படுத்துவதுதான் படத்தின் பெரும் பலம்.
மிலிட்டரி மாமனாராக வரும் வீராச்சாமி எனும் கஜினி மகன் மீது பாசம் காட்டும்போதும் சரி, மனைவி மீது காதல் கொள்ளும்போதும், மருமகள் மீது காமம் கொள்ளும்போதும் வெவ்வேறுவித பரிமாணங்களில் நடித்து தனக்கும் பேசத்தக்க எதிர்காலம் இருக்கிறது என்பதை தன் படிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆனால் 17 ஆண்டுகள் பார்டரில் போராடி தேசத்தை காப்பவர், மகன் விட்டுச்சென்ற தேகத்தை சூறையாடுவது என்னதான் சந்தர்ப்ப சூழ்நிலை என்றாலும் கொடூரம். கஞ்சா கருப்பு சர்ச் பாதராக சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரிக்கறார்.
ஆணுறையையும், அட்வைசையும் படகில் முதலிரவு கொண்டாட போகும் நண்பனுக்கு கொடுத்து அனுப்பும் பறவை முருகேஷனில் தொடங்கி, வீராசாமிக்கு அட்வைஸ் பண்ணும் மீசை பெரியவர் வரை சகலரும் பாத்திரம் அறிந்து நடித்திருப்பது படத்தின் பெரும்பலம். பொம்பளைங்களை பத்து தடவை பார்த்தாலே அழகா இல்லாத பொம்பளைங்களும் அழகா தெரிவாங்க. அதுதான் பொம்பளைங்களோட மந்திர சக்தி. இதுல இருந்து விடுபட முடியாது. மருமகள்கிட்ட இருந்து விலகலன்னா வீட்டுல பிணம் விழும் என்று அந்த பெரியவர் சொல்வது க்ளைமாக்ஸில் பலித்துபேவது நெஞ்சை உருக்குகிறது.
உத்பல்வி நாயனாரின் ஒளிப்பதிவில் கடலும் மலையும் யானைகளும் படகுகளும் கண்களுக்கு குளிர்ச்சி என்பது ப்ளஸ். சுந்தர்சி பாபுவின் இசையில் யார் இங்கு நல்லவர்கள் பாடல் தவிர வேறு எதுவும் காதுகளுக்கு குளிர்ச்சி இல்லை என்பது மைனஸ்.
கொச்சையான கதை என்றாலும் இச்சையான காட்சிகளை மட்டுமே நிரப்பி காசு பார்க்க நினைக்காமல், சமூகத்திற்கு சமூகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செக்ஸ் கொடூரங்களை வைத்தே பாடம் கற்பிக்க முயற்சிக்கும் இயக்குனர் சாமிக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். உயிர், மிருகம் படங்களை அடுத்து சமூக பிரக்ஞையுடன் சாமி இயக்கியிருக்கும் சிந்த சமவெளியும் நாகரீகமே!
மொத்தத்தில் சிந்து சமவெளி சொல்கிறது நாகரீக உறவிற்கான வழி!
-------------------------------
குமுதம் விமர்சனம்
ஊருக்கு ஒதுக்குப் புறத்து தியேட்டரில் "மாமனாரின் இன்பவெறி என்ற பெயரில் வெளியிடப்பட வேண்டிய கதை கொண்ட திரைப்படம். ஆனால், தணிக்கை சான்றிதழுடன் வெகுஜன திரைப்படமாக வந்திருப்பதால் விமர்சனம். இல்லாவிட்டால் "மலையாள பிட் படம் என்று ஒதுக்கிவிட்டுப் போகலாம்.
கதை இதுதான். எல்லைப் பாதுகாப்புப் படையில் பல வருடங்கள் பணிபுரிந்துவிட்டு சொந்த கிராமத்துக்கு ஒருவன் திரும்புகிறான். வந்ததும் அவன் மனைவி இறக்கிறாள். பள்ளிப்படிப்பை முடிக்கும் மகனுக்கு அவனது வகுப்புத் தோழியையே மணமுடித்து வைக்கிறான். மகன் ஆசிரியர் பயிற்சிக்கு ஹாஸ்டலுக்குப் போக, இவன் மருமகளுடன் உறவு கொள்கிறான். அதற்கு அவளும் இணங்குகிறாள். எல்லாத் தப்பையும் செய்து முடித்துவிட்டு இருவரும் அவரவர் தரப்பு வாதங்களை சொல்கிறார்கள். இறுதியில், மருமகள் தற்கொலை செய்கிறாள். அப்பாவை மகன் கொல்கிறான். "ஒழுக்கம்தான் எல்லாவற்றிலும் பெரிது என்ற வரிகளுடன் படத்தை முடிக்கிறார்கள்.
கதை சொல்வதற்கு வசதியாக படம் முழுவதும் செயற்கைத்தனமான காட்சிகளை அள்ளித்தெளித்திருக்கிறார் இயக்குனர். ஒரு பக்கம் ரயில் ஓடுகிறது. இன்னொரு பக்கம் கடல் ஆடுகிறது. சுற்றி பச்சைப்பசேல் பள்ளத்தாக்கு. நடுவில் தப்பு செய்ய வசதியாக ஒரு செட் போட்டு தன்னந்தனியே கிராமத்து வீடு என்று சொல்லும் போதே படம் வெளுத்துவிடுகிறது. போதாக்குறைக்கு மாமனாரும், மருமகளும் கட்டிப் பிடித்துக்கொள்ள வசதியாக காட்டுயானைகள் வேறு வீட்டை மிரட்டுகின்றன. வீடு மட்டுமல்ல இப்படி. ஒரு பள்ளிக்கூடமாம். அதில் பாதிரியார் பலான படம் பார்த்து "தீஸ் மாஸ் என்று டான்ஸ் ஆடுவாராம். மாமனாரும், மருமகளும் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு பைக்கில் கிராமத்தை உலா வருவார்களாம். ஆனால், யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம். மகன் வீட்டுக்கு வருவானாம். அப்பாவும், மனைவியும் நடந்து கொள்வது சரியில்லை என்று உணர்ந்ததும், அதை மரத்தடியில் உட்கார்ந்து கதையாய் எழுதுவானாம். கணவன் வந்த பிறகும்கூட மாமனாருடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் மனைவி, கதையைப் படித்துவிட்டு "ஐயோ, பாவம் செய்து விட்டேன் என்று வீட்டுப் பக்கம் ஓடும் ரயிலில் விழுவாளாம். இப்படி படம் முழுக்க அரை வேக்காட்டு அபத்தங்கள்.
படத்தில் இரண்டு நல்ல சங்கதிகள். விதவிதமான வெளிச்சங்களில் விதவிதமான கோணங்களில் செய்யப்பட்டிருக்கும் உத்பால் நாயனாரின் ஒளிப்பதிவு. கதாநாயகி அனகாவின் நடிப்பு. மாணவியிலிருந்து தகாத உறவில் ஈடுபடும் மனைவியாக மாறும் கனமான கதாபாத்திரத்துக்கு கனம் சேர்த்திருக்கிறார்.
சிந்து சமவெளி : நொந்த சமவெளி ; குமுதம் ரேட்டிங் : சுமார்
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!