கதைச் சுருக்கம்
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் விக்ரமாக மாதவன் செம போலீஸ் மிடுக்கு காட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இடம்பெறும் துப்பாக்கி சண்டை காட்சியில் தொடங்கி, இறுதிவரை இல்லை இல்லை.... விஜய்சேதுபதி என்ட்ரி வரை பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். அதன்பின் லாயர் மனைவி ஷ்ரத்தாவுடனான செல்ல சண்டையில் காட்டும் வேகம் விஒய் சேதுபதியுடன் மோதும் காட்சிகளில் இல்லாதது வருத்தம்..
தோட்டா மட்டும் வந்தா போதுமா? துப்பாக்கி வேண்டாமா..? என அலுத்துக் கென்டே ஆரம்ப காட்சியில் விக்ரம் - மாதவன் என்கவுண்ட்டர் களம் இறங்கும் இடங்கள் ஹாசம்!
அதே மாதிரி, போடத் தெரியாதவனுக்கு பொருள் எதுக்குடா?, ஒருத்தனோட கண்ணப் பார்த்தே அவன் கிரிமினலா?, இன்ன சென்ட்டா கண்டுபிடிக்கணும், ஒரு என்கவுண்ட்டர்முடிச்சிட்டு வந்து கண்ண மூடி நிம்மதியா தூங்கிடுவேன், ஏன் தெரியுமா?, நான் கொன்ற எவனும் இன்ன சென்ட் கிடையாது என்பது உள்ளிட்ட வசனங்களில் வாழ்ந்திருக்கிறார் மாதவன்.
தாதா வேதாவாக விஜய் சேதுபதி செம்ம மிரட்டல். அவர் தாதா ஆன கதையும் அதை மாதவனிடம் சொல்லும் விதமும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. எப்பவுமே பிரச்சினைன்னா பிரச்சினையை பார்க்காதே அந்த பிரச்சினைக்கான காரணத்தைப் பின்னணியைப்பாரு.... என்று பன்ச் அடிப்பதில் தொடங்கி புரோட்டா சாப்பிடுவதற்கு சில ரூல்ஸ் இருக்கு... என தன் பாஸ் சேட்டாவிடம் பரோட்டா சாப்பிட புது விதமாக சொல்வித்தருவிலாகட்டும் சகலத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர். பேஷ் ,பேஷ்!
மாதவனின் லாயர் மனைவி ப்ரியா - ஷரத்தா ஸ்ரீநாத், சந்திரா - வரலட்சுமி சரத்குமார், புள்ளி - கதிர், போலீஸ் சைமன் - பிரேம், ஈ.ராமதாஸ்... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும், மண்டைக்கு பின்னும் கண் வச்சிருக்கியா அதனால தான் எனக்கு போலீஸ்காரங்களையே பிடிக்காது.... என புருஷனை கடிந்து கொள்ளும் ஷரத்தா செம்ம.
மணிகண்டனின் வசனம், ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு, பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்டவை படத்திற்கு பெரும் பலம்.
சாம்சி.எஸ்.ஸின் இசையில் ஏய், டாசாங்கு.... உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் தாதாயிஸ கதைக்கேற்ற மிரட்டல்.
புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில்., காந்தி யோட அப்பா காந்தியா சார்? அவரை சுட்ட கோட்சேவோட அப்பா கோட்சேவா சார்..? உங்க லாஜிக்கே தப்பு சார்.. எனும் வசீகர வசனங்களிலும், சார் தங்கச்சி மாப்பிள்ளை என்ன பண்றார்? என பத்திரிகை நீட்டும் சக போலீஸிடம் பத்திரிகையை வாங்கிக் கொண்டே கேட்கும் மாதவனிடம், அந்த போலீஸ் இன்ஜினியர் சார் என பெருமிதமாக சொல்லவும், அதில் என்ன பெருமை? என கேட்கும் இடத்தில் வெளிப்படும் டைக்டர்ஸ் டச்சும் இப்படத்தை பேசவைக்கும்!
ஆக மொத்தத்தில், விக்ரம் வேதா - புது மாதிரி, ரசிகர்களுக்கு பு(பி)டித்த மாதிரி.... போலீஸ் தாதா?!























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!