
மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர
2024 நடிகர் பஹத் பாசிலின் வருடம் என்று சொல்வதற்கு ஏற்ப கடந்த வருடம் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அடித்து தூள் கிளப்பினார். மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான "ஆவேசம்" திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. தமிழில் ரஜினிகாந்த் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "வேட்டையன்" திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக அவர்களது காமெடி கூட்டணிக்கு வரவேற்பும் கிடைத்தது.
அதேபோல கடந்த வருட இறுதியில் தெலுங்கில் வெளியான "புஷ்பா 2" திரைப்படமும் பஹத் பாசிலின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்ததுடன் இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெயரையும் பெற்றது. இதற்கிடையே அவரும் நடிகர் குஞ்சாக்கோ போபனும் இணைந்து நடித்த "போகன்வில்லா" திரைப்படம் மட்டும் தான் சரியாக போகவில்லை.
இந்தநிலையில் இந்த 2025ல் பஹத் பாசிலின் முதல் படமாக "ஓடும் குதிர சாடும் குதிர" என்கிற படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பட நிகழ்வில் பேசும்போது, ""இந்த படத்திற்காக 90 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இன்னும் இறுதி கட்டப் பணிகளை நிறைவு செய்ய 50 நாட்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் மே 16ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன” என கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஆவேசம் திரைப்படமும் இதேபோல ஒரு சம்மர் வெளியீடாக ஏப்ரலில் வெளியாகி வெற்றி பெற்றதால் இந்த படத்தையும் சம்மர் விடுமுறையை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்றே தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!