
குழந்தைகளுக்கு நடனம் சொல்லித்தர அதிக பணம் கேட்பதா ? பிரபல நடிகை மீது கேரள அமைச்சர் தாக்கு
கேரளாவில் வருடந்தோறும் அரசு ஏற்பாட்டில் கலோல்சவம் என்கிற பெயரில் அரசு பள்ளி கலை திருவிழா நடைபெற்று வருகிறது. கேரள கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வருடம் தோறும் சினிமா துறையை சேர்ந்த பிரபல நடிகைகள் குறிப்பாக நடனம் தெரிந்த நடிகைகள் கலந்து கொண்டு அதில் பங்கேற்கும் மாணவிகளுக்கு நடன பயிற்சி கொடுத்து நிகழ்ச்சியில் ஆட வைப்பது வழக்கம். அப்படி இந்த முறை மாணவிகளுக்கு நடனம் சொல்லித் தருவதற்காக ஒரு பிரபல நடிகையை கேரள கல்வித்துறை அதிகாரிகள் அணுகியுள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் வெகு சில நாட்களுக்கு தினம் பத்து நிமிடம் மட்டுமே பயிற்சி கொடுப்பதற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளார் அந்த பிரபல நடிகை.
இந்த தகவல் கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டியின் கவனத்திற்கு சென்றதும் இது குறித்து காட்டமாகவே வெளியில் பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, “சில நடிகைகள் இங்கே இது போன்ற கல்வி கலைத் திருவிழாக்களில் கலந்து கொண்டு தங்கள் புகழை உயர்த்தி அதன் மூலம் சினிமா வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு மிகப்பெரிய உயரத்திற்கு செல்கிறார்கள். ஆனால் தங்களை இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய இது போன்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தினசரி கொஞ்ச நேரம் நடனம் கற்றுக் கொடுப்பதற்காக 5 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.
அவரது செயல் மற்றும் ஆணவத்தனமான போக்கு கண்டிக்கத்தக்கது இவர்களை விட நடனத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட எத்தனையோ பெண்கள் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள். அவர்களை வைத்து மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பிரபல நடிகையின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் யார் அந்த நடிகையாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!